அஜர்பைஜான் நாட்டில் விநாயகர் கோவில் - சுவாரஸ்யமான தகவல்
விநாயகரைப் பற்றி பேசும்போது அவர் மிகவும் எளியவர், பிள்ளையாரை மரத்தடியிலும் பார்க்கலாம், பிரம்மாண்டமான கோவிலிலும் பார்க்கலாம். இந்து மதக் கோவில்களில் கணபதிக்கும் கண்டிப்பாக இடம் இருக்கிறது. ஆனால், கடல் தாண்டி அஜர்பைஜானிலும் விநாயகர் பெருமான் இருக்கிறார்ன்னு உங்களுக்கு தெரியுமா?
2018ம் ஆண்டில் அன்றைய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அஜர்பைஜான் நாட்டிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். அப்போது, அந்நாட்டின் தலைநகரம் பாகுவிற்கும் அவர் சென்றார்.
அதன் பின்னர், செய்தித்தாள்களில் வெளியான அவரது புகைப்படத்தில், இந்து கோவிலுக்கு சென்று வணங்கிய காட்சி ஒன்று இடம் பெற்றிருந்தது. அந்த இடத்தில் இருந்த கல்லில் சமஸ்கிருத மொழியில் சில சுலோகங்கள் எழுதப்பட்டிருந்தது. ஸ்ரீ கணேசாய நம என்று தொடங்கும் அந்த ஸ்லோகத்தில் ஓம் அக்னே நம என்ற ரிக்வேதப் பாடலும் இடம் பெற்றிருந்தது.
இது, அஜர்பைஜான் போன்ற ஒரு முஸ்லீம் நாட்டில் விக்ன விநாயகருக்கும் இடம் இருந்தது நிரூபணமானது. இந்த செய்தியை வெளியுறவு அமைச்சகம் செய்திருந்த ட்விட்டரில் வெளியிட்டு உறுதி செய்தார். 'அக்னேய நம! வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பாகுவில் உள்ள 'தீக் கோயில்' அட்டேஷ்காவில் பிரார்த்தனை செய்கிறார்.
இந்த கோவில் இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் பார்சிகளின் வழிபாட்டுத் தலமாக இருந்தது. 1745-56 இல் எழுதப்பட்ட கல்வெட்டுகளில் இங்கு விநாயகரை வழிபாடு நடைபெற்றதும், புனிதமான நெருப்பைப் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்த கோவில் 1745ஆம் ஆண்டுக்கு முந்தையது என்பதை கல்வெட்டுகள் உறுதிப்படுத்துகிறது. இந்தக் கோவில் அட்டேஷ்கா கோவில் என்று அழைக்கப்பட்டு வருகிறது. அட்டேஷ்கா என்பது இடைக்கால இந்து மதத் தலம், அஜர்பைஜானின் தலைநகரான பாகுவுக்கு அருகிலுள்ள சுரக்கனி நகரில் கணபதியின் ஆலயம் அமைந்துள்ளது.