வீட்டுக்குள் நுழைந்த விஷப்பாம்பு - முதலாளி உயிரை காப்பாற்ற போராடிய நாய் - பின்பு நடந்த சோகச் சம்பவம்
அம்பத்தூர் அருகே வீட்டு வளாகத்தில் நுழைந்த விஷப்பாம்பை வீட்டிற்குள் நுழையவிடாமல் போராடிய வளர்ப்பு நாய் பாம்போடு சண்டையிட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அம்பத்தூர், கலைவாணன் நகரைச் சேர்ந்தவர் தமிழ். இவரது வீட்டில் லேப் இனத்தைச் சேர்ந்த நாய் ஒன்று வளர்க்கப்பட்டு வந்தது. அவரது வீட்டு வளாகத்தில் நாய் விளையாடிக் கொண்டிருந்தது.
அப்பொழுது திடீரென வீட்டு வளாகத்திற்குள் புகுந்த மூன்றடி நல்ல பாம்பை கண்ட நாய், பாம்பினை வீட்டிற்குள் நுழையவிடாமல் தடுத்து நிறுத்த முயற்சி செய்தது.
அப்போது, விஷப்பாம்போடு போராடி வந்த நாயை விஷப்பாம்பு கடித்தது. நாயின் அலறல் சத்தம் கேட்டு வெளியே வந்த வீட்டு உரிமையாளர்கள் வெளியே வந்து பார்த்தார்.
அப்போது, பாம்பு அவர்கள் வீட்டு வளாகத்தில் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அப்போது, அந்த பாம்பு இருசக்கர வாகனத்தில் ஓடி மறைந்து கொண்டது. வீட்டின் உரிமையாளர் பாம்பை தேடி பார்த்துக் கொண்டிருந்த போது, திடீரென்று நாய் மயக்கமடைந்தது.
உடனே, மயக்கமடைந்த நாயை மருத்துவமனைக்கு அவசரமாக அழைத்துச் சென்றனர். ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக நாய் உயிரிழந்தது.
இதற்கிடையே இருசக்கர வாகனத்தில் புகுந்துகொண்ட 3 அடி நீளம் உள்ள நல்ல பாம்பு குறித்து வீட்டின் உரிமையாளர் அம்பத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் என்ஃபீல்ட் இருசக்கர வாகனத்தில் மறைந்திருந்த நல்ல பாம்பை லாவகமாக பிடித்து பாதுகாப்பாக வனப்பகுதியில் விட்டனர்.
முதலாளி வீட்டில் விஷப்பாம்பு நுழைந்து விடக்கூடாது என்று போராடி தன்னுயிரை விட்ட வளர்ப்பு நாயின் பாசப் போராட்டம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.