இலங்கையை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து
இலங்கைக்கு எதிரான டி20 தொடரை இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 டி 20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் டி20 போட்டியில் வென்ற இங்கிலாந்து 1-0 என முன்னிலை பெற்றது.
இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி கார்டிப்பில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் அந்த அணி 7 விக்கெட்டுக்கு 111 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதையடுத்து, 112 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. ஆனால் மழை குறுக்கிட்டதால் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி இங்கிலாந்துக்கு 18 ஓவரில் 103 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இறுதியில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றிக்கு தேவையான இலக்கை இங்கிலாந்து அணி எட்டியது. இதன் மூலம் டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி கைப்பற்றி அசத்தியது.