இங்கிலாந்தையே வீட்டுக்கு அனுப்பிட்டோம். ஆஸ்திரேலியாவ சமாளிக்க மாட்டோமா - டிம் சவுத்தி
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிக்காக நியூசிலாந்து அணி கடுமையாக போராடும் என நியூசிலாந்து அணியின் டிம் சவுத்தி தெரிவித்துள்ளார்.
டி.20 போட்டிகளுக்கான சாம்பியனை தீர்மானிக்கும் டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் துபாயில் துவங்கியது.
இந்த தொடரின் லீக் சுற்றுகள் முடிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து ஆகிய நான்கு அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றன.
இதில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணியும், பாகிஸ்தான் அணியை வீழ்த்திய ஆஸ்திரேலிய அணியும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.
நியூசிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான இறுதி போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை (14ம் தேதி) நடைபெற உள்ளது.
இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ள இரு அணிகளுமே இதுவரை டி.20 உலகக்கோப்பையை வெல்லாததால், இந்த போட்டிக்காக ஒட்டுமொத்த ரசிகர்களும் இந்த போட்டிக்காக மிகுந்த ஆவலுடன் காத்துள்ளனர்.
அதே போல் முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் வல்லுநர்கள் இறுதி போட்டியில் எந்த அணி வெல்லும் என்பது குறித்தான தங்களது கணிப்புகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்தநிலையில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இறுதி போட்டி குறித்து பேசிய நியூசிலாந்து அணியின் சீனியர் வீரரான டிம் சவுத்தி, வெற்றிக்காக நியூசிலாந்து அணி நிச்சயம் போராடும் என தெரிவித்துள்ளார்.
இது குறித்து டிம் சவுத்தி பேசுகையில், 'ஆஸ்திரேலிய அணி வலுவான அணியாக உள்ளது.
கடந்த 2015ம் ஆண்டிற்கு பிறகு நாங்கள் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இறுதி போட்டியில் விளையாடியது இல்லை. ஆனால் ஆஸ்திரேலிய அணி தற்போது முழு பலத்துடன் இல்லை என்பது தெரியும்.
நாங்கள் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி.20 தொடரை சமீபத்தில் தான் வென்றுள்ளோம்.
ஆஸ்திரேலிய அணி ஆபத்தான அணி என்பதில் சந்தேகம் இல்லை, இறுதி போட்டியில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம்' என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய டிம் சவுத்தி, 'ஆஸ்திரேலிய அணி அதிக ஆபத்தானது என்றாலும் எங்களுக்கு பயம் கிடையாது.
நாங்கள் இந்த தொடர் முழுவதும் சவாலான அணிகளை எதிர்கொண்டு தான் இறுதி போட்டி வரை தகுதி பெற்றுள்ளோம்.
ஆஸ்திரேலிய அணியும், இங்கிலாந்து அணியை போன்ற வலுவான பேட்டிங் ஆர்டரை கொண்டது தான்.
பந்துவீச்சாளராக எங்களது வேலை ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை நெருக்கடிக்குள் வைத்து கொள்வது தான். வெற்றிக்காக நிச்சயம் கடுமையாக போராடுவோம்' என்று தெரிவித்தார்