கடைசி டெஸ்ட் போட்டி ரத்து , காரணம் இது தான் - தினேஷ் கார்த்திக் விளக்கம்

dineshkarthik engvsind 5thtest
By Irumporai Sep 10, 2021 11:57 AM GMT
Report

இந்திய அணியின் பிசியோதெரபிஸ்டுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் இந்திய வீரர்கள் அச்சமடைந்ததாக தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடியது. லண்டன் ஓவல் டெஸ்டை இந்திய அணி வென்று டெஸ்ட் தொடரில் 2-1 என முன்னிலை பெற்றது. 5-வது டெஸ்ட், மான்செஸ்டரில் நடைபெறுவதாக இருந்தது.

ஆனால், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பந்துவீச்சுப் பயிற்சியாளர் பரத் அருண், ஃபீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் ஜூனியர் பிசியோதெரபிஸ்ட் யோகேஷ் பார்மருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் அஇந்திய அணியின் வியாழக்கிழமை பயிற்சி ரத்தானது. அனைத்து இந்திய வீரர்களுக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

அதில் யாருக்கும் கொரோனா இல்லை என்பது உறுதியானது. இந்த நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் பேச்சுவார்த்தை நடத்தியது பிசிசிஐ. 5-வது டெஸ்ட் ரத்தானதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

5-வது டெஸ்டை வேறொரு தருணத்தில் நடத்த விரும்புவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த நிலையில் என்ன காரணத்துக்காக 5-வது டெஸ்டில் விளையாட இந்திய வீரர்கள் மறுப்பு தெரிவித்தார்கள் என்பதை தினேஷ் கார்த்திக் வெளிப்படுத்தியுள்ளார்.

தனியார் கிரிக்கெட் தொலைக்காட்சிக்கு தினேஷ் கார்த்திக் அளித்த பேட்டியில்: சிலரிடம் நான் பேசினேன். 4-வது டெஸ்டுக்குப் பிறகு அனைவரும் சோர்வடைந்து விட்டார்கள். கிட்டத்தட்ட எல்லா டெஸ்டுகளும் கடைசி வரை சென்றன.

அதனால் அவர்கள் சோர்வடைந்து விட்டார்கள். அவர்கள் வசம் ஒரு பிசியோதெரபிஸ்ட் தான் தற்போது உள்ளார். இருவர் இருந்தார்கள். ஆனால் ஒருவரைத் தனிமைப்படுத்தினார்கள்.

சில பயிற்சியாளர்கள் கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். மேலும் , அணியில் இருந்த ஒரு பிசியோதெரபிஸ்டிடம் அனைவரும் பணியாற்றியுள்ளார்கள். இப்போது அவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

அனைவருக்கும் சிகிச்சை செய்த பிசியோதெரபிஸ்டுக்கு கொரோனா என்றவுடன் வீரர்கள் மிகவும் பயந்து விட்டார்கள். மேலும், 5-வது டெஸ்ட் முடிந்த பிறகு அனைவரும் ஐபிஎல் போட்டியில் விளையாட உள்ளார்கள்,பிறகு டி20 உலகக் கோப்பை. பிறகு நியூசிலாந்துக்கு எதிரான தொடர் உள்ளது. ஒரு வார இடைவெளியில் அவர்களால் எத்தனை கொரோனா பாதுகாப்பு வளையத்தில் இருக்க முடியும்? எனக் கூறியுள்ளார்.