தனது கடமையை மீறினால் டுவிட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை கைவிட்டுவிடுவேன் - எச்சரிக்கை விடுத்த எலான் மஸ்க்
டுவிட்டரை 44 பில்லியன் டாலருக்கு வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட டெஸ்லா தலைமை நிர்வாகி எலான் மஸ்க், தனது முன்னுரிமைகளில் ஒன்று “ஸ்பேம் போட்களை” அகற்றுவது என்று டுவீட் செய்த சில நாட்களுக்குப் பிறகு, டுவிட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக கூறினார்.
எலான் மஸ்க் தயக்கம்
டுவிட்டரில் மொத்தமுள்ள கணக்குகளில் 5% போலி கணக்குகள் இருப்பதால் டுவிட்டரை வாங்க எலன் மஸ்க் தயக்கம் காட்டுவதாக தகவல் வெளியானது. எலான் மஸ்கின் இந்த அறிவிப்பையடுத்து டுவிட்டர் நிறுவன பங்குகள் மதிப்பு 20 சதவீதம் வரை சரிந்துள்ளது.
இதனையடுத்து, தற்போது போலி கணக்கு விவரங்களை முழுமையாக தராவிட்டால் டுவிட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை கைவிட்டுவிடுவேன் என்று எலான் மஸ்க் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
எலான் மஸ்க் கடிதம்
அந்த கடிதத்தில்,
ஸ்பேம் மற்றும் போலி கணக்குகள் பற்றிய தரவுகளை முழுமையாக வழங்க தவறினால், டுவிட்டரை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் இருந்து விலகி விடுவேன். ஒப்பந்தத்தின் கீழ் டுவிட்டர் தனது கடமைகளுக்கு இணங்க வெளிப்படையாக மறுக்கிறது. இது போலிக் கணக்குகள் பற்றிய தரவின் மூலம் மஸ்க்கின் சொந்த பகுப்பாய்வு எதைக் கண்டறியும் என்ற கவலையின் காரணமாக டுவிட்டர் நிறுவனம் தரவை நிறுத்தி வைக்கிறது என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. டுவிட்டர் தனது கடமைகளை மீறுவதாகவும், ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதற்கான அனைத்து உரிமைகளும் தமக்கு உண்டு.
இவ்வாறு அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இக்கடிதத்தின் பொருட்டு எலான் டுவிட்டரை வாங்கும் முடிவு கேள்விக் குறியாகி உள்ளது. இந்த ஒப்பந்தம் ரத்தானால் எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்திற்கு ஒரு பில்லியன் டாலர் வழங்க நேரிடும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.