முன்பை விட டுவிட்டரை சிறந்ததாக மாற்ற நான் அதிகம் விரும்புகிறேன்... - நச்சுன்னு பேசிய எலான் மாஸ்க்
டுவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலருக்கு எலன் மாஸ்க் வாங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆனால் எப்போது அதிகாரபூர்வமாக தொகை பரிமாற்றம் நடக்கும். மாஸ்க் வாங்கிய பிறகு டுவிட்டர் நிறுவனத்தை வழிநடத்த போவது யார் என்பது போன்ற விவரங்கள் வெளியாகவில்லை.
டுவிட்டர் நிறுவனத்தை இந்தியரான பராக் அகர்வால் தற்போது வழிநடத்தி வருகிறார். இந்த டுவிட்டர் நிறுவன ஒப்பந்தம் உறுதிசெய்யப்பட்டிருப்பதால் 273 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இதற்கு முன்பு எலெக்ட்ரிக் வாகன தொழிலதிபராகவும், ஸ்பேஸ் எக்ஸ் என்னும் விண்வெளி நிறுவன அதிபராக மட்டுமே அறியப்பட்டு வந்த எலான் மாஸ்க் தனது நிறுவனங்கள் பட்டியலில் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றையும் சேர்த்துள்ளார்.
இந்நிலையில், இது குறித்து எலான் மாஸ்க் பேசியதாவது -
பேச்சு சுதந்திரம் என்பது ஜனநாயக செயல்பாட்டின் அடித்தளம். மனித குலத்தின் எதிர்காலத்திற்கு இன்றியமையாத பல விஷயங்கள் விவாதிக்கப்படும் தளமாக டுவிட்டர் இருக்கிறது. அதனால் முன்பை விட டுவிட்டரை சிறந்ததாக மாற்ற நான் அதிகம் விரும்புகிறேன்.
புதிய அம்சங்கள் கொண்டு வரப்படும். அதன் மூலம் டுவிட்டர் மேம்படுத்தப்படும். டுவிட்டருக்கு என மிகப்பெரிய சக்தி இருக்கிறது. இந்நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பை நான் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.