‘ஒருவேளை நான் இறந்துவிட்டால்..' - எலான் மஸ்க் ட்வீட்டால் பரபரப்பு
டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ-வாக இருக்கும் எலான் மஸ்க் சில வாரங்களுக்கு முன்பு ட்விட்டரை 44 பில்லியன் டாலர் கொடுத்து தனக்கு சொந்தமாக்கி கொண்டார். சமீபத்தில் ட்விட்டர் வலைதளத்தில் பயனர்களின் கருத்து சுதந்திரம் குறித்து எலான் மஸ்க் கேள்வி எழுப்பியிருந்த நிலையில் சில வாரங்களுக்கு முன் ட்விட்டரின் கணிசமான பங்குகளை வாங்கினார்.
அதன்பின் தற்போது ட்விட்டர் நிறுவனத்திற்கு ஓனராகியுள்ளார். இந்த தொகையை முழுவதுமாக செலுத்தி ட்விட்டரை சொந்தமாக்கி கொண்ட பின் தனது யோசனைக்கும், எண்ணத்திற்கு இணையான நிர்வாக குழுவையும், உயர் அதிகாரியையும் நியமிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
If I die under mysterious circumstances, it’s been nice knowin ya
— Elon Musk (@elonmusk) May 9, 2022
இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் எலான் மஸ்க் பதிவிட்ட ஒரு ட்வீட் தான் தற்போது பரபரப்பை எற்படுத்தியுள்ளது. அந்த ட்வீட்டில், ‘ ஒருவேளை நான் இறந்துவிட்டால், உங்களை அறிந்ததில் மகிழ்ச்சி’ என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு இணையத்தில் பரபரப்பை ஏற்பட்டுத்தியுள்ளது.
இந்த ட்வீட்டை பதிவிடுவதற்கு முன்னர் ரஷ்ய மொழியில் பதிவிட்டிருந்த ஒரு ட்வீட்-ஐ எலான் பகிர்ந்திருந்தார். அதில் ‘ உக்ரைனின் சர்வாதிகாரி படைகளுக்கு ராணுவ தொலைத்தொடர்பு கருவிகளை எலான் மஸ்க் அளித்து வருகிறார். நீங்கள் என்ன தான் முட்டாள்தனமாக நடந்துகொண்டாலும் நீங்கள் தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்’ என கூறப்பட்டிருந்தது.
இதனால், உக்ரைனுக்கு எலான் மஸ்க் உதவி செய்வதால் ரஷ்ய படைகள் அவருக்கு மிரட்டல் விடுத்திருக்கலாம் எனவும் அதனால் அவர் இறந்துவிட்டால் என ட்விட் செய்திருக்கலாம் எனவும் பேசப்படுகிறது.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்லிங்க் செயற்கைகோள் மூலம் அந்நாட்டிற்கு ஏற்கனவே ப்ராட்பேண்ட் சேவையை மஸ்க் வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.