பொம்மன்-பெள்ளி விவகாரம்; பணத்தை வாங்கி ஏமாற்றினோமா? படக்குழு வெளியிட்ட விளக்கம்!!
பொம்மன்-பெள்ளி விவகாரம் தொடர்பாக 'தி எலிஃபெண்ட் விஸ்பெரர்ஸ்' படக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
பொம்மன்-பெள்ளி விவகாரம்
உலகையே இந்தியா பக்கம் திரும்பி பார்க்க வைத்த ஆவண குறும்படம் தான் 'தி எலிஃபெண்ட் விஸ்பெரர்ஸ்'. இந்த படத்தை கார்த்திகி கோன்சால்வேஸ் இயக்கியிருந்தார். குனீத் மோங்கா என்பவர் தயாரித்திருந்தார். இப்படம் 95வது ஆஸ்கர் விழாவில் சிறந்த ஆவணக் குறும்படம் பிரிவில் விருது வாங்கியது.
இந்நிலையில் அண்மையில் இந்த படத்தின் மூலம் பிரபலம் அடைந்த பொம்மன்-பெள்ளி தம்பதியினர் இயக்குநர் கார்த்திகி கோன்சால்வேஸ் மீது பணம் வாங்கிவிட்டு ஏமாற்றி விட்டதாக குற்றச் சாட்டை வைத்தனர். ஆஸ்கர் விருது கிடைத்ததும் கார்த்திகி எங்களை கண்டுகொள்ளவில்லை. படப்பிடிப்பின்போது அவரிடம் பணம் இல்லை. எங்களிடம் ஏற்பாடு செய்ய சொன்னார். அதனால் எங்கள் பேத்தியின் திருமணத்திற்காக வைத்திருந்த ரூ.1 லட்சத்தை கொடுத்தோம்.
அதை அவர் இன்னும் திருப்பி கொடுக்கவில்லை. கேட்டால் முறையான பதிலும் இல்லை என்று பொம்மன்-பெள்ளி தம்பதியினர் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக இயக்குனருக்கு நோட்டீசும் அனுப்பப்பட்டது. அதில் 'நேரம் செலவிட்டு நடித்ததற்காக படத்தின் வருமானப்படி முறையான வீடு, வாகனம் மற்றும் போதிய நிதியுதவி ஆகியவற்றை தருவதாக உறுதியளிக்கப்பட்டது.
இவர்களை உண்மையான ஹீரோக்கள் எனக் கூறி பல்வேறு அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என அனைவரையும் பார்க்க வைத்து விளம்பரப்படுத்திவிட்டனர். படக்குழு தமிழக முதலமைச்சரின் பரிசுத் தொகையையும் வாங்கிவிட்டதாக நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடிக்க இதற்கு விளக்கம் அளித்து படக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
படக்குழு விளக்கம்
அந்த அறிக்கையில் "இப்படத்தின் நோக்கம் யானைப் பாதுகாப்பு, வனத்துறையின் முயற்சிகள் மற்றும் அதற்கு பணியாற்றுகின்ற பொம்மன் மற்றும் பெல்லி ஆகியவற்றை முன்னிலைப்படுத்துவதாகும். இப்படம் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது. சமூகத்தில் யானை வளர்ப்பவர்களை பற்றிய உண்மையான தாக்கத்தை உருவாக்கியுள்ளது.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், ஆனைமலை புலிகள் காப்பகத்தில் யானைகளை பராமரிக்கும் 91 யானைகள் மற்றும் பணியாளர்களுக்கு சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வீடுகள் கட்டவும், யானைகள் முகாமை மேம்படுத்தவும் நன்கொடை அளித்துள்ளார். இந்த ஆவணப்படம் இந்தியா முழுவதும் உள்ள மாநிலத் தலைவர்களால் கொண்டாடப்பட்டது. மேலும் அகாடமி விருது என்பது பொம்மன் மற்றும் பெள்ளி போன்ற பணியாளர்களுக்குப் பரவலான அங்கீகாரத்தைக் கொண்டு வந்த தேசிய பெருமையின் தருணமாகும்.
படம் மீது சுமத்தப்படுகிற குற்றச்சாட்டு அனைத்தும் பொய்யானவை. இந்தப் படத்தில் பணியாற்றியவர்கள் அனைவர் மீதும் எங்களுக்கு ஆழ்ந்த மரியாதை உள்ளது. மேலும் நல்ல மாற்றத்தை உருவாக்க விரும்புகிறோம்" என படக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.