அதிக மின் கட்டணம் ஏன்? நெல்லை தலைமை பொறியாளர் விளக்கம்
மின் கட்டணம் உயர்வு: நெல்லை மண்டல தலைமை பொறியாளர் விளக்கம் தமிழ்நாட்டில் சமீப காலமாக மின் கட்டணம் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக முந்தைய கட்டணத்தை விட இரண்டு முதல் மூன்று மடங்கு வரை அதிகமாக மின் கட்டணம் வந்துள்ளதாக பலர் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
இந்த நிலையில், அரசு மறைமுகமாக மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளதாக சில அரசியல் கட்சிகளும் குற்றச்சாட்டு முன்வைத்திருந்தன. இதுகுறித்து தமிழ்நாடு மின்சாரத் துறையின் நெல்லை மண்டல தலைமை பொறியாளர் விளக்கம் அளித்துள்ளார்.

தலைமை பொறியாளர் விளக்கம்
அவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், மின்சாரத் துறையின் சில பிரிவுகளில் பில்லிங் செயல்முறையில் ஏற்பட்ட அசாதாரணங்கள் மற்றும் மீட்டர் கணக்கீட்டு குறைபாடுகள் காரணமாக சில நுகர்வோருக்கு தவறுதலாக அதிக மின் கட்டணம் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், இதுபோன்ற தவறுகள் மீண்டும் நடைபெறாமல் இருக்க அனைத்து பிரிவுகளிலும் காலமுறைப்படி திடீர் ஆய்வுகள் மேற்கொள்ள மேற்பார்வை பொறியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், பழுதடைந்த மீட்டர்களால் ஏற்படும் பிரச்சினைகளை ஆரம்ப நிலையிலேயே பிரிவு அலுவலகங்கள் கண்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.