எலக்ட்ரிக் பைக்கின் பேட்டரி வெடித்ததில் தந்தை, மகள் பலி - அதிர்ச்சி சம்பவம்
வேலூரில் மின் இருசக்கர வாகனத்தின் பேட்டரி வெடித்ததில் தந்தை, மகள் இருவரும் உடல் கருகி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் சின்ன அல்லா புரம் பலராமன் முதலியார் தெருவை சேர்ந்த துரைவர்மா என்பவர் புகைப்படக்கலைஞராக உள்ளார். இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்ட நிலையில் மகள் மோகன பிரீத்தி (13) போளூர் அரசு பள்ளியில் 8 ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இதற்காக போளூரில் உள்ள அவரது பாட்டி வீட்டில் தங்கியிருந்து படித்து வந்த மோகன பிரீத்தி இரு தினங்களுக்கு முன் வீட்டிற்கு வந்துள்ளார்.
இதனிடையே இரண்டு நாட்களுக்கு முன்பு துரைவர்மா புதிதாக பேட்டரியில் ஓடும் மின் இருசக்கர வாகனம் ஒன்றை வாங்கியுள்ளார். இந்த பைக்கின் பேட்டரிக்கு இரவு நேரங்களில் சார்ஜ் ஏற்றுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
அதன்படி நேற்று இரவு வீட்டில் பைக் பேட்டரி சார்ஜ் போடுவதற்கு துரைவர்மா மின் இணைப்பு கொடுத்துள்ளார். பைக்கில் ஜார்ஜ் ஏறிக்கொண்டிருந்த நிலையில் பேட்டரி அதிக அளவில் சூடானதாக கூறப்படுகிறது. இதனால் மின் இருசக்கர வாகனம் வெடித்துச் சிதறி தீப்பற்றியது.
இந்த தீ மளமளவென அருகிலிருந்த மற்ற இரண்டு சக்கர வாகனங்களும் பரவி அவை தீப்பற்றி எரிந்தன. . சத்தம் கேட்டு கண்விழித்த துறை வர்மா மற்றும் அவரது மகள் இருவரும் வீட்டை விட்டு வெளியேற முயன்றனர். ஆனால் வாசலிலேயே மற்ற வாகனங்கள் கொழுந்துவிட்டு எரிந்ததால் அவர்களால் வெளியே வரமுடியவில்லை.
மேலும் மின் இருசக்கர வாகனம் வெடித்தத்தில் வீட்டிலிருந்த அனைத்து மின் ஒயர்கள் எரிந்து கட்டில், நாற்காலிகளும் தீப்பிடித்தன. இதனால் வீடு முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்தது. அவர்களது வீடு சிறிய அறை என்பதாலும் வீட்டில் ஜன்னல் இல்லை என்பதாலும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு வீட்டின் கழிவறையில் அமர்ந்திருந்த நிலையிலேயே இறந்தனர்.
இந்த புகை பக்கத்து வீட்டிற்கும் சென்ற நிலையில் திடுக்கிட்டு கண் விழித்த அக்குடும்பத்தினர் நடந்த விபரீத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அருகிலுள்ள காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் 2 பைக், வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமானது. பின் வீட்டினுள் சென்று துரைவர்மாவும் அவரது மகள் மோகன பிரீத்தியின் உடல்களையும் பிரேதப்பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து பாகாயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் வேலூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.