பத்து ஈழத்தமிழர்கள் விடுதலை - முதலமைச்சருக்கு இயக்குநர் கௌதமன் நன்றி!
திருச்சி சிறப்பு முகாமிலிருந்து 10 ஈழத்தமிழர்கள் விடுதலை செய்ய உடனடி நடவடிக்கை எடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இயக்குநரும்,தமிழ் பேரரசு கட்சியின் பொதுச்செயலாளருமான கௌதமன் நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,நாங்கள் தொடர்ந்து எடுத்த பெருமுயற்சியால் திருச்சி சிறப்பு முகாமிலிருந்து முதல் கட்டமாக இன்று பத்து ஈழத்தமிழர்கள் விடுதலையாகி அவர்களின் விருப்பத்தின் பேரில் அவர்களனைவரும் இலங்கைக்கு செல்கிறார்கள். உடனடி நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வர் அவர்களுக்கும் இவர்கள் சம்மந்தமான காவல்துறை அதிகாரிகளுக்கும் திருச்சி மாவட்ட ஆட்சியர், மறுவாழ்வுத்துறை ஆணையர் மற்றும் அகதிகள் மறுவாழ்வுத்துறை அமைச்சர் ஐயா மஸ்தான் அவர்களுக்கும் நெகிழ்ந்த நன்றிகள்.
இதேபோன்று மீதமுள்ள தமிழீழத் தமிழர்கள் அனைவரையும் விரைவில் விடுதலை செய்து அவர்களின் குடும்பத்தினரோடு சேர்ப்பிக்க வேண்டுமென மீண்டும் வேண்டுகோள் வைப்பதாக தெரிவித்துள்ளார்.