இனி பார்க்கப்போற பழனிசாமியே வேற.. ஒருத்தரையும் விடமாட்டோம் - இபிஎஸ் ஆவேசம்
அன்று இருந்த பழனிசாமி வேறு, இனி பார்க்க போகிற பழனிசாமி வேற என இபிஎஸ் ஆவேசம் தெரிவித்துள்ளார்.
பொதுக் கூட்டம்
கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டையில் அதிமுக பொதுக் கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “அதிமுக இத்தோடு முடிந்துவிடும் என ஸ்டாலின் பேசி வருகிறார்.
ஆனால், ஸ்டாலினின் பகல் கனவு ஒருபோதும் பலிக்காது. நாட்டை காப்பதற்கு ராணுவம் போல அதிமுகவை வெற்றி பெறச் செய்ய சிப்பாய்களாக தொண்டர்கள் உள்ளனர். எடப்பாடி பழனிசாமி பொறுப்பு ஏற்ற பிறகு 10 தேர்தல்களில் அதிமுக தோல்வி அடைந்துவிட்டது என்று ஸ்டாலின் பேசுகிறார்.
ஆனால், 2011 முதல் 2021 வரை எத்தனை முறை திமுக தோல்வி அடைந்தது என்று அவர் யோசித்துப் பார்க்க வேண்டும். 2011ஆம் ஆண்டு எதிர்க்கட்சி வரிசையில் கூட அமர முடியாமல் போனது திமுக. ஆகவே, அதிமுகவை விமர்சனம் செய்ய திமுகவுக்கு தகுதியில்லை.
இபிஎஸ் ஆவேசம்
2021-ல் மக்களை ஏமாற்றுவதற்காக சுமார் 500-க்கும் மேலான அறிவிப்புகளை வெளியிட்டார்கள். பொய் சொல்லி ஆட்சிக்கு வந்தது திமுக. பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம், சிலிண்டர் மானியம், கல்விக் கடன் என்று எந்த வாக்குறுதியையும் திமுக நிறைவேற்றவில்லை.
திமுக அமைச்சர்கள் மீது உள்ள அனைத்து ஊழல் வழக்குகளும் அதிமுக ஆட்சி அமைந்ததும் விரைந்து விசாரிக்கப்படும். ஒருவரையும் விடமாட்டோம். வேண்டும் என்றே பொய் வழக்கு போடுவது, அதிமுகவை அவதூறாக பேசுவதை எல்லாம் நாங்கள் வேடிக்கை பார்க்க வேண்டுமா?
வேடிக்கை பார்த்த அந்தக் காலம் எல்லாம் மாறிவிட்டது. அன்று இருந்த பழனிசாமி வேறு, இனி பார்க்க போகிற பழனிசாமி வேறு.. எனப் பேசியுள்ளார்.