தவெக வேட்பாளர் கடத்தப்பட்டாரா? மனு நிராகரிக்கப்பட்ட பின்னர் மாயம்
எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளரின் மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் வேட்பாளர் மாயமானதால், கடத்தப்பட்டுள்ளாரா என தவெகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
எடப்பாடி தவெக வேட்பாளர் மனு நிராகரிப்பு
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், இன்று வேட்புமனு மீதான பரிசீலனை நடைபெற்று வருகிறது.
சுமார் 7000க்கும் அதிகமான வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்துள்ள நிலையில், தற்போது வரை 1000க்கும் மேற்பட்டவரின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளர் அருண் குமாரின் மனு நிராகரிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேட்புமனுவில் சில தகவல்கள் முறையாக இல்லாதால் அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
வேட்பாளர் மாயம்
வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வரும் எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்த அருண் குமார் வெளியே சென்று வருவதாக கூறி விட்டு சென்றவர் திரும்ப வரவில்லை. அவரது செல்போனும் அனைத்து வைக்கப்பட்டுள்ளது.
இதனால் தங்கள் வேட்பாளர்கள் கடத்தப்பட்டதாக கூறி வட்டாச்சியர் அலுவலகம் முன்பு குவிந்த தவெகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேட்பாளரை கண்டுபிடித்து தருவதாக காவல்துறையினர் சமாதானத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அவருக்கு மாற்று வேட்பாளராக தவெக சார்பில் மனுதாக்கல் செய்துள்ள நித்யாவின் வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளதால் எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் தவெக போட்டியிட முடியாத நிலை உள்ளது.
இதனால் தவெக 233 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட வாய்ப்புள்ளது. இதே போல், சிதம்பரம் தொகுதி தவெக வேட்பாளர் பாரியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாற்று வேட்பாளராக மனுதாக்கல் செய்த அவரது தந்தையின் வேட்புமனு ஏற்கபட்டுள்ளது.