பிரியா விடை கொடுக்க டெல்லி செல்லும் எடப்பாடி பழனிசாமி
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குடியரசு தலைவருக்கு பிரியா விடை
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு நாளை டெல்லியில் பிரியாவிடை வழங்கப்பட உள்ளது. நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் இணைந்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு பிரியாவிடை அளிக்கவுள்ளனர்.
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் வருகிற 24-ஆம் தேதியுடன் நிறைவு பெறும் நிலையில் விருந்து உபச்சாரத்துடன் அவருக்கு விடை அளிக்கப்படுகிறது. இந்நிலையில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லிக்கு செல்ல திட்டமிட்டுள்ளார்.
டெல்லி செல்லும் ஈபிஎஸ்
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பிரியா விடை நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் என்றும் இதை தொடர்ந்து டெல்லியில் பாஜக முக்கிய தலைவர்களை ஈபிஎஸ் சந்திக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக பொதுக்குழுவில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்,அத்துடன் ஓபிஎஸ் உடனான மோதல் போக்கு ஆகியவற்றுக்கு மத்தியில் டெல்லியில் பாஜக முக்கிய தலைவர்களை சந்திக்க உள்ளது அரசியல் களத்தில் பரபரப்பாகியுள்ளது.