ஆறுகுட்டி போல் எந்த குட்டியும் செல்லவில்லை எல்லா குட்டிகளும் எங்களிடம் தான் உள்ளது - எடப்பாடி பழனிசாமி
ஆறுகுட்டி போல் எந்த குட்டியும் செல்லவில்லை எல்லா குட்டிகளும் எங்களிடம் தான் உள்ளது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திருச்சியில் நடைபெற்ற முன்னாள் அமைச்சர் சிவபதியின் இல்ல திருமண விழாவில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். பின்னர் சென்னை செல்வதற்காக திருச்சி விமான நிலையம் சென்ற அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
ஓபிஎஸ் உடன் சேர மாட்டோம்
அப்போது பேசிய அவர், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்திய ஆறுமுகசாமி விசாரணை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும். ஆகவே அந்த அறிக்கை குறித்து கருத்து சொல்வது சரியாக இருக்காது.
அதிமுகவினர் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம் என ஓபிஎஸ் கூறியது அவருடைய நிலைப்பாடு. சேர்ந்து செயல்பட வேண்டாம் என்பது தொண்டர்களுடைய நிலைப்பாடு. அதுவே என்னுடைய நிலைப்பாடும்.

பதவி ஆசை இல்லை என கூறும் ஓபிஎஸ் அதிமுக தலைமை அலுவலகத்தில் புகுந்து பொருட்களை சேதப்படுத்தியது ஏன்? எட்டு வழிச்சாலை பணிக்கு யார் ஆட்சியில் இருந்தாலும் நிலத்தை கையகப்படுத்தி தான் சாலை அமைக்க வேண்டும். மாற்றுப்பாதை வழியாக சாலை அமைக்க வேண்டும் என்பது சாத்தியமில்லை.
எல்லா குட்டியும் எங்களிடம் உள்ளது
இத்திட்டம் குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆட்சி இல்லாத போது ஒரு பேச்சும் ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு பேச்சும் பேசி வருகிறார்.
மாற்றி பேசுவது தான் திமுகவின் திராவிட மாடல். அதிமுக ஆட்சியில் தமிழகத்துக்கு பத்தாயிரம் கோடியில் வரவிருந்த எட்டு வழிச்சாலை திட்டத்தை தடுத்து நிறுத்திவிட்டு தற்போது அந்தத் திட்டம் வருவதில் எங்களுக்கு ஆட்சேபினை இல்லை என தெரிவிக்கின்றனர்.
அதிமுக விவகாரத்தில் பாஜகவின் தலையீடு இல்லை. திருச்சி உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களின் நிலத்தடி நீர், நீர் மேலாண்மை மற்றும் விவசாய தேவைக்காக அதிமுக ஆட்சியில் ரூ. 14,000 கோடியில் கொண்டுவரப்பட்ட காவிரி குண்டாறு இணைப்பு திட்டத்தை முடங்கிக் கிடப்பது வருத்தம் அளிக்கிறது.
எங்கள் மீது கோபம் இருந்தால் காட்டலாம் மக்களுக்கு கொண்டு வந்த திட்டங்களை புறக்கணிப்பது நியாயம் இல்லை. ஆறுகுட்டி போல் எந்த குட்டியும் செல்லவில்லை எல்லா குட்டிகளும் எங்களிடம் தான் உள்ளது என்றார்.