பாஜகவுடன் இனி கூட்டணி கிடையாது; மக்களிடத்தில் எடுத்து சொல்லுங்கள் - அதிமுகவினருக்கு பழனிசாமி உத்தரவு!
பாஜகவுடன், அதிமுக இனி எக்காலத்திலும் கூட்டணி வைக்காது என மக்களிடம் எடுத்து சொல்லுங்கள் என அதிமுகவினருக்கு எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
அதிமுக-பாஜக கூட்டணி
அதிமுகவின் 52ம் ஆண்டு தொடக்கவிழா அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அ.தி.மு.க.வில் உள்ள 82 மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.
அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி "பாரதிய ஜனதா கட்சியுடன் இனி கூட்டணியே வேண்டாம் என்று முடிவெடுத்து நாம் வெளியேறி இருக்கிறோம். அம்மாவின் வழியில் இந்த முடிவை நான் எடுத்திருக்கிறேன்.
இனி எந்த காலத்திலும் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி கிடையாது என்பதில் நான் உறுதியுடன் உள்ளேன். இதனை திமுக தலைவர் ஸ்டாலினால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
மக்கள் மத்தியில் எடுத்து சொல்லுங்கள்
இதனாலேயே சிறுபான்மையினர் மீது அதிமுகவுக்கு திடீர் பாசம் ஏன்? என கேட்டு தனது கோபத்தை வெளிப்படுத்துகிறார். பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து நாம் வெளியேறிய பிறகு சிறுபான்மை கட்சிகள் நம்மை நாடி வந்து கொண்டிருக்கின்றன.
அதிமுக எடுத்துள்ள இந்த முடிவை அவர்கள் பாராட்டி உள்ளனர். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் மட்டுமின்றி, 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்பதை திட்டவட்டமாக கூறிக் கொள்கிறேன். எனவே மக்கள் மத்தியில் சென்று பேசும்போது இதனை நீங்கள் ஆணித்தரமாக எடுத்து சொல்லுங்கள்.
பாரதிய ஜனதா கட்சியுடன் அதிமுக இனி எக்காலத்திலும் கூட்டணி வைக்காது என்பதை தெள்ளத்தெளிவாக எடுத்துச் சொல்லுங்கள். இதன் மூலமாக கூட்டணி விவகாரத்தில் திமுக மேற்கொள்ளும் பொய் பிரசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.