அதிமுகவின் திட்டங்களை நிறுத்திய திமுக; வருகிற தேர்தலில் விடிவு பிறக்கும் - எடப்பாடி பழனிசாமி!
வருகிற தேர்தலில் திமுகவை மக்கள் விரட்டியடிப்பார்கள் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி
தமிழக முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி திருச்சி வந்தார். அவருக்கு புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை செக்போஸ்ட் அருகே முன்னாள் அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அப்போது அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் ஏறி பேசிய எடப்பாடி பழனிசாமி "முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கொடுத்த பணிகளை சிறப்பாக செய்து முடிக்க கூடியவர்.
அதிமுக ஆட்சி காலத்தில் விராலிமலை உள்ளடக்கிய புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளின் 50 ஆண்டுகால கனவு திட்டமான காவிரி குண்டாறு இணைப்பு திட்டம் நிறைவேற்றப்பட்டது.
மக்கள் விரட்டியடிப்பார்கள்
திமுக அரசு அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அந்தத் திட்டத்தை கிடப்பில் போட்டு விட்டது. முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வருகிற தேர்தலில் மக்கள் பதிலடி கொடுப்பார்கள்.
அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட அம்மா மினி கிளினிக், அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கான மடிக்கணினி வழங்கும் திட்டம், தாலிக்கு தங்கம், இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை திமுக அரசு நிறுத்திவிட்டது.
இதற்கெல்லாம் வருகிற தேர்தலில் விடிவு பிறக்கும். தீய சக்தியான திமுகவை மக்கள் விரட்டியடிப்பார்கள். அதற்கு எடுத்துக்காட்டாக இந்த கூட்டமும் மக்கள் முகத்தில் தெரியும் பிரகாசமும் அமைந்துள்ளது" என்றார்.