நெருங்கும் உள்ளாட்சித்தேர்தல் : பிரச்சாரத்தை தொடங்கும் எடப்பாடி பழனிசாமி
தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நெல்லை, தென்காசி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களில் வருகின்ற அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது.
தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15ஆம் தேதி தொடங்கியுள்ள நிலையில் இன்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைய உள்ளது. இந்த நிலையில், ஆளும் கட்சியான திமுக சட்டமன்ற தேர்தலில் அமைத்த அதே கூட்டணியுடன் தேர்தலை எதிர்கொள்கிறது.
பல்வேறு வியூகங்களுடன் தேர்தலை எதிர்கொள்ள தயாராக இருக்கிறது. எதிர்க்கட்சியான அதிமுக கூட்டணியிலிருந்து பாமக திடீரென விலகியது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளான நிலையில் பாஜக உள்ளிட்ட கட்சிகளுடன் அதிமுக உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள உள்ளது.
இத்தகைய சூழலில் நேற்று அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக தலைமை வெளியிட்டது. இந்த நிலையில், நாளை முதல் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தை தொடங்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தனது கூட்டணிக் கட்சிகளை ஆதரித்து தேர்தல் நடக்க உள்ள 9 மாவட்டங்களிலும் அவர் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக தெரிகிறது.