தமிழக முதல்வர் பொம்மை முதல்வராக இருந்து வருகிறார் - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
திமுக ஆட்சிக்கு வந்தபின் சட்டம் ஒழுங்கு சீரழிந்துவிட்டதாக எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி
2026 சட்டமன்ற தேர்தல் வர உள்ள நிலையில், "மக்களை சந்திப்போம் தமிழகத்தை காப்போம்" என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
வட மற்றும் டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணத்தை முடித்துள்ள அவர், நேற்று முதல் தென்மாவட்டங்களில் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள எடப்பாடி பழனிசாமி, திருப்புவனத்தில் போலீஸ் காவலில் கொல்லப்பட்ட அஜித்குமார் வீட்டிற்கு சென்று, புகைப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன் பின்னர், அவரது தாய் மற்றும் சகோதரருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
20 ஆணவப்படுகொலைகள்
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "அஜித்குமார் காவல்துறையினரால் அடித்து கொல்லப்பட்டது கடும் கண்டனத்திற்குரியது. மக்களை பாதுகாக்க வேண்டிய காவல்துறையால் உயிர் பறிபோயுள்ளது.
காவல்துறையினருக்கு அழுத்தம் கொடுத்தது யார்? தமிழக முதல்வர், பொம்மை முதல்வராக இருந்து வருகிறார். டாஸ்மாக்கின் மூலமாக 45 கோடி லஞ்ச பணம் மேலிடத்திற்கு செல்கிறது.
கொள்ளையடிப்பதில் முதன்மை மாநிலமாக உள்ளது தமிழ்நாடு. திமுக ஆட்சிக்கு வந்தபின் சட்டம் ஒழுங்கு சீரழிந்துவிட்டது. கொலை, கொள்ளை, திருட்டு நடக்காத நாளே இல்லை. தமிழகத்தில் திமுக ஆட்சியில் இதுவரை 20 ஆணவப்படுகொலைகள் நடந்துள்ளன" என தெரிவித்துள்ளார்.