திமுக கூட்டணி தேர்தல்வரை இருக்குமா என தெரியாது - எடப்பாடி பழனிசாமி
சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமைக்கப்படும் என எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி
சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார்.
இதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "சென்னையில் மழை நீர் வடிகால் பணிகள் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை அண்மையில் குறைந்த அளவில் பெய்த மழைக்கே சென்னை தாக்கு பிடிக்கவில்லை.
திமுக கூட்டணி
திமுக ஆட்சியில் பெரும்பாலான அமைச்சர்கள் பெரிய அளவில் ஊழலில் ஈடுபட்டுள்ளனர். 2026 ல் அதிமுக ஆட்சி அமைந்ததும் ஊழல் பட்டியல் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். வெள்ள தடுப்பு பணிகள் குறித்து மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகதான் வெள்ளை அறிக்கை கேட்கிறோம்.
நடிகர் விஜய்க்கு ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது. பொது சேவை செய்ய வேண்டும் என்ற விருப்பத்தின் அடிப்படையில் கட்சி தொடங்கிய அவர்களது மாநாடு வெற்றி பெற என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். திமுக கூட்டணிக்குள் புகைய ஆரம்பித்துள்ளது.
தேர்தல் வரை திமுக கூட்டணி இருக்குமா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமைக்கப்படும். திமுக கூட்டணி பலத்தையே நம்பி உள்ளது. கூட்டணி கட்சிகள் கைவிட்டால் திமுக கீழே விழுந்துவிடும்" என பேசினார்.