அதிமுக தலைமைக் கழகத்தில் என்ன நடந்தது? உடனே அறிக்கை தாக்கல் செய்யுங்கள்... - காவல்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்க பொதுக்குழுவில் சிறப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.
ஓபிஎஸ் - ஈபிஎஸ்
ஓபிஎஸ் மட்டுமின்றி வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோரும் அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். செய்தியாளர்களிடம் பேசிய ஒபிஎஸ், என்னை கட்சியில் இருந்து நீக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை என்றும் எடப்பாடி பழனிசாமி, மற்றும் கே.பி.முனுசாமியை அதிமுகவில் இருந்து நீக்குவதாக ஓ.பி.எஸ் அறிவித்துள்ளார். ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக மாறி மாறி அறிவித்துக்கொள்வது அதிமுக கட்சியினரிடையே குழப்பத்தையும் கலவரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இரு தரப்பு ஆதரவாளர்கள் மோதல்
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜூலை 11ம் தேதி எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் மோதிக்கொண்டனர். இதனால், அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. தலைமை அலுவலகத்தில் உள்ள கதவுகள் உடைக்கப்பட்டது. இரு தரப்பு ஆதரவாளர்கள் மோதிக்கொண்டதால், அதிமுக தலைமை அலுவலகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஐகோர்ட் விசாரணை
இது குறித்த இன்று நீதிபதி சதீஷ்குமார் முன்பு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
ஈபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் ஈபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் வாதாடினார். அப்போது அவர் பேசுகையில் -
எதிர்க்கட்சி அலுவலகமான அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைத்தது ஜனநாயகத்திற்கு விரோதமானது. கட்சி விதிப்படி தலைமை நிலைய செயலாளரே தலைமை அலுவலகத்தின் பொறுப்பாளராவார். ஓபிஎஸ் பொதுக்குழுவுக்கு வராமல், அதிமுக அலுவலகம் செல்வார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. கட்சி அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கோப்புகளை எடுத்து சென்றனர். ஆயுதங்களுடன் ஓபிஎஸ் தரப்பினர் அதிமுக அலுவலகத்துக்குள் நுழைந்ததை போலீசார் யாரும் தடுக்கவில்லை. தலைமை அலுவலகத்திற்கு பாதுகாப்பு வழங்கக்கோரி ஏற்கனவே மனு அளித்திருக்கிறோம். போலீசார் உரிய பாதுகாப்பு வழங்கவில்லை என்று வாதாடினார்.
போலீசார் தரப்பு
போலீசார் தரப்பில் கூறுகையில், அதிமுக தலைமைக் கழகத்தில் நடந்த மோதலின்போது, போலீஸ் தலையிட்டதால்தான் உயிரிழப்புகள் தடுக்கப்பட்டன என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து அதிமுக தலைமைக்கழகத்தில் 11ம் தேதி நடந்த சம்பவங்கள தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தது.