எனது மகன் அரசியலுக்கு வருகிறாரா? எடப்பாடி பழனிசாமி விளக்கம்
எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுன் அரசியலுக்கு வருவதாக தகவல் வெளியான நிலையில் அது குறித்து விளக்கமளித்துள்ளார்.
அரசியலுக்கு வரும் எடப்பாடி பழனிசாமி மகன்?
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுன், அரசியலுக்கு வர உள்ளதாகவும், அவருக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட உள்ளதாகவும் கடந்த சில நாட்களாக தகவல் வெளியானது.

இந்நிலையில், இன்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரின் ஆளுநர் உரைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து இது குறித்து விளக்கமளித்துள்ளார்.
இதில் பேசிய அவர், "எனது மகன் மிதுன் அரசியலுக்கு வருவதாக தொலைக்காட்சிகளில் பல்வேறு விவாதங்கள் வருகிறது. அது தவறு. அவர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக மட்டுமே உள்ளார். கட்சியில் எந்தப் பதவியிலும் இல்லை என்பதை அழுத்தம் திருத்தமாக குறிப்பிடுகிறேன்.

எனது மகன் மிதுன் அரசியலுக்கு வரமாட்டார் என்பதை மீண்டும் ஒருமுறை திட்டவட்டமாக தெரிவிக்கிறேன். ஊடகங்கள் அவதூறு செய்திகளை வெளியிட வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
மேலும், ஆளுநர் உரையில் புதிதாக எந்தத் திட்டங்களும் இடம் பெற வில்லை. அரசு சார்பில் வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கையில் என்ன கூறப்பட்டிருந்ததோ, அதே தான் ஆளுநர் உரையிலும் கூறப்பட்டிருக்கிறது.
ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, பெண்களுக்கு பாதுகாப்பு தரப்படும் என வீர வசனம் பேசினார்கள். தற்போது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து காணப்படுகிறது.
பெண்களின் பாதுகாப்புக்காக சிங்கப்பெண் சிறப்பு படையை உருவாக்கினார்கள். ஆனால், அந்த சிறப்பு படையின் பாதுகாப்புக்கே இன்னொரு படை அமைக்கப்பட வேண்டிய சூழல்தான் இந்த ஆட்சியில் நிலவுகிறது. அந்த அளவிற்கு சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கின்ற நிலை உள்ளது.
எந்த மாவட்டத்திற்கு என்னென்ன திட்டங்கள் ஒதுக்கப்படும், அதற்கான நிதி ஒதுக்கீடு என்ன என்பது குறித்து எந்த ஒரு தகவலும் இடம் பெறவில்லை.
திமுக ஆட்சியில் எவ்வளவு கடன் இருந்தது என்பது குறித்து தேர்தலுக்கு முன்னரே தவெகவுக்கு தெரியும். இதையெல்லாம் தெரிந்து கொண்டு தான் வாக்குறுதிகளை அளித்தார்கள்.
தற்போது இவைகளை சரி செய்த பிறகு தான், வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும் எனக் கூறுகிறார்கள். வெள்ளை அறிக்கையின் மூலம், அவர்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது எனத் தெரிவிக்கின்றனர்" என பேசியுள்ளார்.