டெங்கு காய்ச்சலால் சிறுவன் பலி; சுகாதார சீர்கேட்டை சரி செய்யாத திமுக அரசுக்கு கண்டனம் - எடப்பாடி பழனிசாமி!
திமுக அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
சிறுவன் உயிரிழப்பு
சென்னை மதுரவாயல் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த அய்யனார் - சோனியா தம்பதியினரின் ரக்ஷன் என்ற 4 வயது மகன் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் இன்று உயிரிழந்தார்.
சிறுவனின் இறப்புக்கு மதுரவாயல் பகுதியில் மழைநீர் தேங்கி சுகாதார சீர்கேடு நிலவியதால்தான் டெங்குகாய்ச்சல் பரவியதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் சிறுவனின் உயிரிழப்பிற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் சென்னை மாநகராட்சியின் அலட்சியப் போக்கும், இந்த பகுதியின் கவுன்சிலரும் இதுகுறித்து கன்டுகொள்ளவில்லை என்றும் உறவினர்கள் குற்றம் சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
மேலும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உறவினர்கள் போலீசாரிடம் புகார் அளித்தனர். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து ட்விட்டர் பதிவு ஒன்றை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி கண்டனம்
அந்த பதிவில் "சென்னை மதுரவாயல் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த அய்யனார் - சோனியா தம்பதியினரின் நான்கு வயது மகன் ரக்ஷன் கடந்த சில நாட்களாக #டெங்கு காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த நிலையில் இன்று உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன்.
குழந்தையை இழந்து வாடும் அவரது பெற்றோருக்கும் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் வசிக்கும் பகுதியில் மழை நீர் தேங்கி உள்ளதாகவும், சுகாதார சீர்கேடு காரணமாகவே சிறுவன் உயிரிழந்ததாகவும் செய்திகள் வருகின்றன.
சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் சுகாதார சீர்கேட்டை சரி செய்யாத இந்த விடியா திமுக அரசை வன்மையாக கண்டிப்பதுடன், டெங்கு பரவலை முற்றிலும் தடுக்க உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் இந்த அரசை வலியுறுத்துகிறேன்.