"செவிடன் காதில் சங்கு ஊதியது போல் உள்ளது திமுக ஆட்சி"...கடுமையாக சாடிய எடப்பாடி
விலைவாசி உயர்வு ஒட்டுமொத்த மக்களையும் பாதிக்கிறது தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சி செவிடன் காதில் சங்கு ஊதியது போல் உள்ளது என கடுமையாக விமர்சனம் செய்தார்.
காவல் துறை ஒத்துழைப்பு இல்லை
சேலத்தில் எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், அதிமுக மாநாடு சிறப்பாக நடைபெற்றது என்றும், ஆனால் தங்களுக்கு காவல் துறையினர் சார்பில் எந்த ஒத்துழைப்பும் வழங்கப்படவில்லை என தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வழக்கறிஞ்சர்களுடன் காவல் துறை உயரதிகாரிகளை சந்தித்து மாநாட்டிற்கு காவல் துறையினரின் ஒத்துழைப்பு வேண்டும் என கேட்டுக்கொண்ட போதும் தங்களுக்கு போதுமான அளவில் காவல் துறையினர் அளிக்கப்படவில்லை என குற்றம்சாட்டிய அவர், உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள மாநாட்டிற்கு மட்டும் எந்த அளவிற்கு காவல் துறையினர் ஒத்துழைப்பு வழங்கப்படுகிறது என்பதை அப்போதே பார்த்து கொள்ளுங்கள் என சுட்டிக்காட்டினார்.
காவிரி நதிநீர் பிரச்னைக்கு முதலமைச்சரால் தீர்வு காணமுடியவில்லை. குறுவை சாகுபடி அரசை நம்பி செய்துவிட்டார்கள். தண்ணீரை சரியான நேரத்தில் திறந்தால் மட்டும் போதாது முறையாக தண்ணீரை விநியோகிக்க வேண்டும். டெல்டாக்காரன் என்று முதலமைச்சர் சொல்லி உள்ளார். அந்த டெல்டாக்காரன் என்ன செய்கிறார் என்று பார்ப்போம்.கர்நாடகாவில் இந்த மாதத்துடன் மழை சீசின் முடிந்தால் மழை பொழிவு குறையும். இதனால் குடிநீர் பிரச்னை ஏற்படும் அச்சத்தில் மக்கள் உள்ளார்கள்.
"செவிடன் காதில் சங்கு ஊதியது போல் உள்ளது"
அதிமுகவை பொறுத்தவரை முதற்கட்டமாக பூத் கமிட்டி, பாசறை, மகளிர் குழு அமைக்கும் பணிகளை செய்து வருகிறோம். அஸ்திவாரம் போட்டால்தான் கட்டடம் வலுவாக இருக்கும். இந்த பணிகள் நிறைவு பெற்ற உடன் பாராளுமன்றத் தேர்தல் பரப்புரை மேற்கொள்ளப்படும். தொடர்ந்து திமுக அரசு குறித்து விமர்சித்த அவர், விலைவாசி உயர்வு என்பது ஒட்டுமொத்த மக்களையும் பாதித்துள்ளது என குறிப்பிட்டு, மளிகை சாமன்கள் விலை 40 சதவீதம் வரை உயர்ந்துவிட்டது என்றும் இந்த திமுக ஆட்சி என்பது செவிடன் காதில் சங்கு ஊதியது போல் உள்ளது என கடுமையாக விமர்சனம் செய்தார்.
கொடநாடு விவகாரத்தில், ஜெயலலிதா அவர்களுக்கு ஒருநாளாவது கனகராஜ் ஒட்டுநராக இருந்துள்ளாரா? என கேள்வி எழுப்பிய அவர், அப்படி ஏதும் நடக்கவில்லை என்று தெரிவித்தார். பொதுக்குழு தீர்மானம் குறித்து வெளிவந்த தீர்ப்பை சுட்டிக்காட்டி பேசிய அவர், விரக்தியின் விளிம்புக்கு ஓபிஎஸ் பேசி வருகிறார் என் விமர்சித்து, நல்லத்தீர்ப்பு தங்கள் பக்கம் வந்ததால் அவர் திமுகவிற்கு ஜால்ரா போட்டுக் கொண்டு இருக்கிறார் என சாடினார்.