வாய்ஜாலம் காட்டும் திமுக...அதிமுக வேடிக்கை பார்க்காது..கோபமடைந்த எடப்பாடி
பட்டியலின் மக்களின் பாதுகாவலர் என திமுக ஆட்சியாளர்கள் வாய்ஜாலம் காண்பிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
எடப்பாடி கண்டனம்
தென்காசி மாவட்டம், வெங்காடம்பட்டி ஊராட்சியில் ஆதிதிராவிடர் காலனியில் வசிக்கும் 40 வீடுகளுக்கு குடிநீர் வசதி வழங்காமல் மக்களை திமுக அரசு வஞ்சிக்கிறது என குறிப்பிட்டு அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள்” என்று சொல்வார்கள். இந்த திமுக அரசின் பொம்மை முதலமைச்சர் ஸ்டாலின் அவிழ்த்துக் கொட்டும் புளுகு மூட்டைகளின் ஆயுள் 8 நிமிடம்கூட இருப்பதில்லை என குற்றம்சாட்டி உள்ளார்.
ஓட்டுக்காக நாங்கள் சிறுபான்மையினரின் பாதுகாவலர்கள், சமூக நீதியைக் காப்பதே எங்கள் உயிர் மூச்சு, ஆதிதிராவிட மக்களின் சம்பந்தி நாங்கள் என்றெல்லாம் வாய் ஜாலம் காட்டும் பம்மாத்து பேர்வழி ஆட்சியாளர்களின் வெகுஜன விரோத செயல்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது, தமிழகத்தை நிலைகுலையச் செய்துள்ளது என்றும் அவர் தனது அறிக்கையில் சாடியுள்ளார்.
அதிமுக வேடிக்கை பார்க்காது
மக்களின் அடிப்படை தேவையான குடிநீர் வழங்குவதில் கூட திமுக அரசு பாரபட்சம் காட்டுகிறது. பட்டியலின மக்களின் பாதுகாவலர் என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் விடியா திமுக ஆட்சியில், பட்டியலின மக்கள் சொல்லொண்ணாத் துயரங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் என தனது அறிக்கையில் சுட்டிக்காட்டி இருக்கிறார்.
ஆதிதிராவிட மக்கள் வசிக்கும் காலனிக்கே குடிநீர் வழங்காமல் தடுக்கும் திமுக-வினரின் முயற்சியை வன்மையாகக் கண்டிக்கிறேன் என குறிப்பிட்டு, தமிழ்நாட்டில் பட்டியலின மக்களுக்கு கொடுமைகள் தொடர்ந்தால் அதிமுக வேடிக்கை பார்க்காது என அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பட்டியலின மக்களின் பாதுகாவலர் என்று வாயில் வடை சுடும் விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம்!
— AIADMK (@AIADMKOfficial) August 7, 2023
- மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் திரு. @EPSTamilNadu அவர்கள். pic.twitter.com/1X3lCrNsDC