இளைஞர்களின் வாழ்க்கையை பலியாக்கும் அரசின் நடவடிக்கை - இபிஎஸ் கண்டனம்
கேங்மேன் பணி வழங்கக் கோரி அரசின் கவனத்தை ஈர்க்கப் போராட்டிய தமிழக இளைஞர்கள் மேல் பதிந்த வழக்குகளை திரும்பப் பெற அதிமுவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
எடப்பாடி அறிக்கை
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2017-ஆம் ஆண்டு முதலான அதிமுக ஆட்சியின் இறுதி நாள் வரை ஆர்ப்பாட்டம், போராட்டம் என பல்லாயிரக்கணக்கான போராட்டங்கள் நடைபெற்றன என்பதை குறிப்பிட்டு ஆனால் அப்போது அரசு அனைத்துப் போராட்டங்களையும் சட்டப்படி கையாண்டது என பதிவிட்டு, யார் மீதும் பழிவாங்கும் நோக்கத்தில், குறிப்பாக போராடிய இளைஞர்களின் எதிர்காலம் பாதிக்கும் வகையில் எந்தவிதமான நடவடிக்கையிலும் அரசு ஈடுபடவில்லை என பதிவிட்டுள்ளார்.
திமுக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் முதலமைச்சரின் தொகுதியில், கேங்மேன் பணிகளுக்குத் தேர்வு செய்யப்பட்ட சுமார் 800 விடுபட்ட கேங்மேன்கள் போராட்டம் நடத்திவிட்டார்கள் என்ற எண்ணத்தில், அவர்களுக்கு சம்மன் வழங்க முயற்சிக்கும் திமுக அரசின் காவல்துறை, அம்முயற்சியை கைவிட வேண்டும் என்றும், தங்களது எதிர்காலத்திற்காகப் போராடும் இளைஞர்களுடைய வாழ்வினை பலியாக்கும் எந்தவித முயற்சியிலும் ஈடுபட வேண்டாம் என்று காவல் துறையை வலியுறுத்துவதாக எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
கேங்மேன் பணி ஆணைகளை வழங்கவேண்டும்
மேலும், கேங்மேன் பணிகளுக்குத் தேர்வான 5,237 இளைஞர்களின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு, அவர்களுக்கு உடனடியாக கேங்மேன் பணி நியமனஆணைகளை வழங்க, திமுக அரசின் முதலமைச்சர் ஸ்டாலினை வலியுறுத்துவதாகவும் தனது அறிக்கையில் அவர் பதிவிட்டுள்ளார்.
#கேங்மேன் பணி வழங்கக் கோரி அரசின் கவனத்தை ஈர்க்கப் போராட்டிய தமிழக இளைஞர்கள் மேல் பதிந்த வழக்குகளை திரும்பப் பெறவும், அவர்களுக்கு உடனடியாக பணி நியமன ஆணை வழங்கிடவும் விடியா திமுக அரசின் முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்.
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) September 24, 2023
மாண்புமிகு அம்மா அவர்கள் மறைவிற்குப் பிறகு, 2017-ஆம் ஆண்டு எனது… pic.twitter.com/Kbl6eyxkNZ
முன்னதாக, முதல்வர் முக ஸ்டாலினின் சொந்த தொகுதியான கொளத்தூரில் 800-க்கும் மேற்பட்ட கேங்மேன்கள் போராட்டம் நடத்தினர். இதில் கலந்து கொண்டவர்களுக்கு வழக்கு பதியப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில் அதனை கண்டித்து எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.