அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கிய ஜாமீன் - ரத்து செய்யக் கோரி அமலாக்கத் துறை மனு!
அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீனை ரத்து செய்யக் கோரி அமலாக்கத் துறை உச்ச நீதிமன்றத்தில் புதிதாக மனுத் தாக்கல் செய்துள்ளது.
செந்தில் பாலாஜி
2015 - 2018 அதிமுக ஆட்சிக் காலத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகளின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டது உறுதிசெய்யப்பட்டதை அடுத்துக் கடந்த 2023 ஜூன் 14-ம் தேதி செந்தில் பாலாஜியைக் கைது செய்தனர். இதன் காரணமாக அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.தொடர்ந்து 472 நாட்கள் சிறை வாசத்துக்குப் பிறகு செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
அதன்பிறகு 2024 செப்.28-ம் தேதி அவர் மீண்டும் அமைச்சராகப் பதவியேற்றார். இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி வித்யாகுமார் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த வாரம் உச்ச நீதிமன்ற நீதிபதி அபய் எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அமலாக்கத் துறை
அப்போது அமைச்சர் பதவியில் இல்லை எனக்கூறி செந்தில் பாலாஜி ஜாமீன் பெற்றார். ஆனால் ஜாமீன் கிடைத்த மறுநாளே அமைச்சராகப் பதவியேற்றுள்ளார். தற்பொழுது வரை அவருக்கு எதிரான சட்டவிரோத பணப் பரிவர்த்தனை மற்றும் பணமோசடி வழக்குகளில் அரசுப்பணியாளர்கள் சாட்சிகளாக உள்ளனர்.
இந்த நிலையில் செந்தில் பாலாஜி அமைச்சராகப் பதவியில் நீடிக்க விரும்புகிறாரா, இல்லையா என்பது குறித்து அவருடைய கருத்தைக் கேட்டுத் தெரிவிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு அறிவுறுத்தி விசாரணையை வரும் மார்ச் 4-ம் தேதிக்கு நீதிபதி உத்தரவிட்டுத் தள்ளிவைத்தது.
இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீனை ரத்து செய்யக் கோரி அமலாக்கத் துறை உச்ச நீதிமன்றத்தில் புதிதாக மனுத் தாக்கல் செய்துள்ளது.