வேளச்சேரி வாக்குசாவடியில் மறு வாக்குபதிவு
வேளச்சேரி தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி எண் 92-ல் ஏப்ரல் 17 ஆம் தேதி மறு ஓட்டுப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 6 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் வேளச்சேரி தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி எண் 92-ல் ஓட்டுப்பதிவு முடிந்ததும் இரவு 7:30 மணிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை இருவர் இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது
இதனையடுத்து தேர்தல் நடத்தும் அதிகாரிகள், அவர்களிடம் விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர்.
இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அளித்த விளக்கத்தில் , இரு சக்கர வாகனத்தில் எடுத்து செல்லப்பட்ட விவிபேட் இயந்திரத்தில் 15 ஓட்டுகள் பதிவாகி இருந்தன.
ஓட்டுச்சாவடியில் ஓட்டுப்பதிவுக்காக 50 நிமிடங்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளது. பிறகு, விவிபேட்டில் கோளாறு ஏற்பட்டதால், வேறு விவிபேட் மாற்றப்பட்டு உள்ளது.
சம்பந்தப்பட்ட ஓட்டுச்சாவடியில் 200 ஓட்டுகள் இருக்கும் நிலையில், இந்த இயந்திரத்தில் 15 ஓட்டுகள் பதிவாகி உள்ளது. இரு சக்கர வாகனத்தில் விவிபேட் எடுத்து சென்றது விதிமீறல்.
எனவே, வேளச்சேரி ஓட்டுச்சாவடியில் மறு ஓட்டுப்பதிவு நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் தான் நடவடிக்கை எடுக்கும் என கூறியிருந்தார்.
இந்நிலையில், தற்போது ஏப்ரல் 17ஆம் தேதி அந்த வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவித்துள்ளது.
ஏப்ரல் 17ஆம் தேதி காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் அந்த வாக்குச்சாவடியில் உள்ள வாக்காளர்கள் மட்டும் மீண்டும் வாக்களிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.