ஈரானில் ஹிஜாப் விவகாரம் ; வன்முறையை ஏற்றுக் கொள்ள முடியாது - எச்சரிக்கை விடுத்த அதிபர்
ஈரானில் ஹிஜாப் விவகாரத்தில் வன்முறையை ஏற்றுக் கொள்ள முடியாது என்று அந்நாட்டு அதிபர் இப்ராகிம் ரைசி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மாஷா அமினி மரணம்
ஈரான், குர்திஸ்தான் மாகாணம் சஹிஸ் நகரை சேர்ந்த மாஷா அமினி (22) என்ற இளம்பெண் ஹிஜாப் சரியாக அணியவில்லை என கூறி கடந்த 13-ம் தேதி தெஹ்ரான் நகர போலீசாரால் கடுமையாக தாக்கினார்கள்.
இத்தாக்குதலில் அப்பெண் பலத்த படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால், மாஷா கோமா நிலைக்கு சென்றார். இதனையடுத்து, கடந்த 17-ம் தேதி மாஷா சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவத்தை கண்டித்து ஈரானில் பெண்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
மாஷா அமினியின் சொந்த ஊரான சஹிஸ் நகரில் தொடங்கிய போராட்டம் மெல்ல மெல்ல நாட்டின் பிற பகுதிகளிலும் பரவியுள்ளது. இப்போராட்டத்தில் இறங்கிய முஸ்லீம் பெண்கள் தங்கள் ஹிஜாப்பை கழற்றி எறிந்தனர்.
ஹிஜாப்பை தீ வைத்து எரித்தனர். தங்கள் தலைமுடியை வெட்டி எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். போராட்டக்காரர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 76 பேர் பலியாகி உள்ளனர்.
எச்சரிக்கை விடுத்த அதிபர்
இந்நிலையில் ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி ஒரு சேனலுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில் -
மாஷா அமினியின் மரணம் மிகவும் துயரமானது. ஆனால் வன்முறையை ஏற்றுக் கொள்ள முடியாது. கலவரத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். மக்கள் பாதுகாப்பு என்பது ஈரான் அரசின் சிவப்பு கோடாகும். அதை மீறி குழப்பம் விளைவிக்க யாருக்கும் அனுமதி கிடையாது என்றார்.