தமிழகத்தில் மின்கட்டணம் உயர்கிறது - அதிர்ச்சியில் பொதுமக்கள்
தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்ந்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் மின்கட்டணம் நிர்ணயம் செய்தல், மின்வாரிய செயல்பாட்டை கண்காணித்தல், மின்வாரியம் மற்றும் மின் நிறுவனங்கள் இடையிலான பிரச்னைக்கு தீர்வு காணுதல் போன்ற பணிகளை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தான் கண்காணித்து வருகிறது.
இந்த ஆணையத்திடம் ஆண்டுதோறும் நவம்பருக்குள் மின் வாரியம் தன் வருவாய் தேவை அறிக்கையுடன் சேர்த்து மின் கட்டண மனுவை சமர்ப்பிக்கவேண்டும்.அதில் வரவு குறைவாக இருந்தால் மின் கட்டணம் அதிகரிக்கப்படும். செலவு குறைவாக இருந்தால் மின் கட்டணம் குறைக்கப்படும். கட்டணத்தை உயர்த்தும் முன் பொதுமக்களிடம் ஆணையம் சார்பில் கருத்து கேட்கப்பட்டு ஏப்ரல் மாதம் முதல் புதிய கட்டணம் அமலுக்கு வரும்.
ஆனால் தற்போது மின் வாரியம் கடும் நிதி நெருக்கடியில் இருந்தும் மின் கட்டண மனுவை குறித்த காலத்தில் செலுத்தாமல் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதன்படி 2018 - 19 ஆம் ஆண்டு முதல் இதுவரை மொத்த வருவாய் தேவை அறிக்கை மட்டும் சமர்ப்பிக்கப்பட்டு மின் கட்டண மனு சமர்ப்பிக்கப்படாமல் உள்ளது. இதனை விரைந்து அளிக்க மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வலியுறுத்தி வருகிறது.
அதேசமயம் மின்கட்டண மனு சமர்ப்பிக்கப்படாத நிலையில் ஆணையமே தன் அதிகாரத்தை பயன்படுத்தி மின் கட்டணத்தை உயர்த்த முடியும்.அப்படித்தான் கடந்த 2014 ஆம் ஆண்டு 15 சதவீதம் மின்கட்டணம் உயர்த்தப்பட்டது. பின் 2017 ஆம் ஆண்டு புதிய மின் கட்டண ஆணை வெளியிடப்பட்டது. அதில் மின் கட்டணம் மாற்றப்படவில்லை.
மேலும் வீடுகளுக்கு குறைந்த விலையில் மின்சாரம் வழங்குவதற்காக அரசு வழங்கும் மானிய தொகை மட்டும் குறைக்கப்பட்டதால் அரசின் மானிய செலவு சற்று குறைந்தது. ஆனால் தற்போது வரை 2014 ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட மின்கட்டணமே நடைமுறையில் உள்ளது. பின் 2019 ஆம் ஆண்டு 30 சதவீதம் மின் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டது.
அதற்குள் அந்த ஆண்டில் நடந்த லோக்சபா தேர்தல் முடிவு அப்போதைய அதிமுக அரசுக்கு சாதகமாக இல்லாததால் அந்த முடிவு கைவிடப்பட்டது. தொடர்ந்து கொரோனா, ஊரக உள்ளாட்சி தேர்தல், சட்டசபை தேர்தல் ஆகிய காரணங்களால் மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை.
இந்நிலையில் தமிழக மின் வாரியத்தின் கடன் ரூ.1.60 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. எனவே திமுக அரசு கடும் நிதி நெருக்கடியில் உள்ளதால் செலவினங்களை சமாளிக்க வருவாய் ஆதாரங்களை திரட்ட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் மது வகைகள் மீதான வரி வருவாய்க்காக டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில் விலை 10 ரூபாய் முதல் 80 ரூபாய் வரை நேற்று முன்தினம் உயர்த்தப்பட்டது.இதனைத் தொடர்ந்து மின்கட்டணமும் 20 சதவீதம் வரை உயர்த்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.