உலகக்கோப்பை போட்டியின் போது ஏற்பட்ட நிலநடுக்கம் - குலுங்கிய மைதானம்
ஜூனியர் 19 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது பூகம்பம் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கிந்தியத் தீவுகளில் ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது.இதில் நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலியாவும், இங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகளும் மோத உள்ளன.
இதனிடையே தொடரிலிருந்து வெளியேறிய அணிகளுக்கு இடையே தரவரிசையை நிர்ணயிக்க நடந்த பிளேட் சுற்றுகள் போட்டியில் குயின்ஸ் பார்க் மைதானத்தில் ஜிம்பாப்வே, அயர்லாந்து அணிகள் மோதின.
இந்த போட்டியின் போது ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்தது. அப்போது ஆட்டத்தின் 11வது ஓவரில் வீரர்கள் விளையாடி கொண்டிருந்த போது, கேமிராக்கள் திடீரென்று ஆடியது. இதனை கண்ட பார்வையாளர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. அப்போது தான், கிரிக்கெட் வர்ணனையில் ஈடுபட்டு இருந்த ஆண்டிரூ லேனார்ட், பூகம்பம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் அவர் முதல் முறையாக நான் நிலநடுக்கத்தை உணர்கிறேன். பெரிய ரயில், பின்னால் ஓடினால் எப்படி நிலம் அதிருமோ, அது போல் நிலம் அதிர்கிறது. மைதானம் கட்டிடங்கள் கடுமையாக குலுங்குகின்றன என்று நேரலையில் கூறினார். இந்நிகழ்வு கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.