ஒரு வாரம் பேசாமல் இருந்த மனைவி
விழுப்புரத்தில் நேற்று நடந்த பிரசார கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசுகையில்,
என்டிஏ என்றால் எந்த வளர்ச்சியும் இல்லாத கூட்டணி, தமிழ்நாட்டின் வளர்ச்சியை கெடுக்க நினைக்கும் கூட்டணி, பழனிசாமி அவர்களே சாதனைக்கு மட்டுமல்ல உங்களுடைய பொய்க்கும் என்னால் புள்ளி விபரத்தோடு பதில் சொல்ல முடியும்.
சென்னையில் என்னைப் பற்றி என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா? திமுக ஆட்சியில் கொரோனா வந்திருந்தால், இவரே போயிருப்பார் என்று என்னை பேசியிருக்கிறார்.

பழனிசாமி அவர்களே... என் மரணத்தை பற்றி பேசுகிறீர்களே... மரணத்தைப் பார்த்து கலங்கக் கூடியவனோ, பயப்படுகிறவனோ நான் அல்ல.
இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின், 1976ல் நீங்கள் அரசியலுக்கு வருவதற்கு முன்பே, 23 வயதில் மிசாவில் கைது செய்யப்பட்டு சிறைக் கொடுமைக்கு ஆளானவன் நான். ஓராண்டு காலம் நெஞ்சுரத்தோடு சிறையில் இருந்தவன் நான்.
ஆட்சியர், அமைச்சர்கள் என்று யாரிடமும் சொல்லாமல் நான் கொரோனா வார்டுக்கு சென்ற காரணத்தினால் என் மனைவி துர்கா என்னிடம் கோபித்துக்கொண்டு ஒரு வாரம் பேசாமல் இருந்தார், இது சத்தியம்.

மக்களை காக்க எந்த அளவுக்கு துணிச்சலாக செல்லக்கூடியவன், அதற்கெல்லாம் பயந்து அரசியல் தலைவராக நான் இல்லை.
என்னுடைய வருத்தம் என்ன தெரியுமா? தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர், மக்கள் திலகம் எம்ஜிஆர், என்று எத்தனையோ பண்பாடுமிக்க பெருந்தலைவர்களிடம் நேரில் பழகக்கூடிய நீண்ட அரசியல் அனுபவம் கொண்ட நான், இன்று இவருக்கெல்லாம் பதில் சொல்லும் நிலை இருக்கிறதே என உண்மையிலேயே வருத்தப்படுகிறேன் என தெரிவித்துள்ளார்.
