மத்திய அமைச்சர் பதவியா? மதிமுகவின் பிரதமர் வேட்பாளர் இவர்தான் - துரை வைகோ!
பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி தான் என்று திருச்சி மக்களவை தொகுதி மதிமுக வேட்பாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.
துரை வைகோ
மக்களவை தேர்தல் 2024 நாடு முழுவதும் ஏப்ரல் 19-ம் தேதியான நேற்று தொடங்கியது. இந்த தேர்தலானது வரும் ஜூன் மாதம் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் தமிழகம், புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு நேற்று முடிவடைந்தது.
இந்நிலையில் திருச்சி மக்களவை தொகுதி மதிமுக வேட்பாளர் துரை வைகோ தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் "நேற்று நடைபெற்ற 18-வது மக்களவைத் தேர்தல் நாட்டின் எதிர்காலத்தை தீர்வு செய்யும் தேர்தலாக இருக்கும். திருச்சி மக்களவை தொகுதியில் போட்டியிட எனக்கு வாய்ப்பளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி.
பெரும் வரவேற்பு
நேற்றைய வாக்குப்பதிவின் போதே வாக்காளர்களின் முகத்தில் 40 தொகுதிகளிலும் I.N.D.I.A கூட்டணி வெற்றி பெறும் என தெரிந்தது. வேட்பாளராக முதல் முறையாக களமிறங்கிய எனக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு இருந்தது. தீப்பெட்டி சின்னத்தை மக்களிடம் கொண்டு செல்ல சிரமமே இல்லை.
பொதுமக்கள் அனைவரிடமும் புழக்கத்தில் உள்ள பொருளான தீப்பெட்டி சின்னமாக அறிவிக்கப்பட்டதால் மக்களிடம் சின்னத்தை கொண்டு செல்ல எளிமையாக இருந்தது. எனக்கு தேர்தல் அரசியலில் போட்டியிட விருப்பம் இல்லை. கட்சியினரின் கோரிக்கையால் மட்டுமே வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டேன்.
ஒரு தொகுதியில் மட்டும் நாங்கள் போட்டியிட்டதால் மத்திய அமைச்சர் பதவியை பற்றி சிந்திக்கவில்லை. மதிமுகவின் பிரதமர் வேட்பாளர் ராகுல்காந்திதான். ராகுல்காந்தி பிரதமராக பதவியேற்க வேண்டுமென எனக்கு விருப்பமுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.