ஐ.பி.எல் போன்ற டி20 தொடர்கள் அதிகரித்தால் அவ்வளவு தான் - டுப்லஸ்ஸிஸ் எச்சரிக்கை
இந்தியாவில் தொடங்கப்பட்ட ஐ.பி.எல் தொடர் பிரபலமடைந்ததைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளிலும் இதே போன்று டி20 தொடர்கள் நடத்தப்படுகின்றன.
20 ஓவர் போட்டிகள் தொடர்ந்து பிரபலமாகி வருவது டெஸ்ட் போட்டிகளுக்கு ஆபத்தாக அமையும் என்கிற கருத்து பரவலாக நிலவி வருகிறது. ஏற்கனவே ஐ.பி.எல் போன்ற டி20 தொடர்களுக்கு ஏற்றவாறு சர்வதேச தொடர்கள் மாற்றி திட்டமிடப்படுகின்றன.
இந்நிலையில் டி20 தொடர்கள் தொடர்ந்து அதிகரித்தால் சர்வதேச கிரிக்கெட் காணாமல் போகிவிடும் என தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மன் டுப்லஸ்ஸிஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், “முன்பெல்லாம் ஒரு ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு டி20 தொடர் மட்டும் தான் நடந்து வந்தது. ஆனால் தற்பொழுது ஒரு ஆண்டிற்கு 4 முதல் 5 டி20 தொடர்கள் நடந்து வருகிறது.
இன்னும் சில ஆண்டுகள் கழித்து ஒரு ஆண்டுக்கு 7 முதல் 8 டி20 தொடர்கள் நடைபெறும். அப்படி நடைபெறும் பட்சத்தில் கிரிக்கெட் வீரர்கள் எப்படி சர்வதேச போட்டிகளில் தங்கள் நாட்டுக்காக பங்கேற்க முடியும்.சர்வதேச போட்டிகள் நிச்சயமாக காணாமல் போக வாய்ப்பு உள்ளது.
ஏற்கனவே மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் சிலர் சர்வதேச தொடரில் மட்டும் தங்கள் நாட்டு அணிக்காக விளையாடி விட்டு பின்னர் ஓய்வு நாட்களில் உலக அளவில் நடைபெறும் அனைத்து டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
அதே நிலைமை தற்பொழுது தென் ஆப்பிரிக்கா அணியிலும் கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பித்து உள்ளது. இது காலப்போக்கில் அனைத்து அணிகளுக்கும் நடைபெற நிறைய வாய்ப்பு உள்ளது.
இப்படி நடந்தால் நிச்சயமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் காணாமல் போய்விடும். தற்போது கால்பந்து விளையாட்டில் நடந்து கொண்டிருப்பது போல கிரிக்கெட்டிலும் நடைபெற நீண்ட காலம் ஆகாது” என்றும் எச்சரித்துள்ளார்.
டுப்லஸ்ஸில் கருத்து முக்கியத்துவம் பெற ஆரம்பித்திருக்கிறது.