இங்கிலாந்தில் வந்தா ரத்தம்..ஐபிஎல்ன்னா தக்காளி சட்னியா? - சர்ச்சையை கிளப்பும் சம்பவம்
ஐபிஎல் தொடரில் மீண்டும் கொரோனா தொற்று வேலையை காட்ட ஆரம்பித்திருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2021 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி தொடங்கியது. ஆனால் மே மாதத்தின் முதல் வாரத்தில் தொடரில் பங்கேற்ற வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் போட்டிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டு எஞ்சிய போட்டிகள் செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
இதனிடையே நேற்று நடைபெற்ற போட்டியில் ஹைதராபாத் - டெல்லி அணிகள் மோதின. இதற்காக நேற்று முன்தினம் வீரர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா சோதனையில் ஹைதராபாத் அணி வீரரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான நடராஜனுக்கு தொற்று உறுதியானது.
இதனால் தொடர்ந்து அவருடன் நெருக்கமாக இருந்த மற்றொரு தமிழக வீரர் விஜய் சங்கர் உட்பட 6 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு சோதனை நடத்தப்பட்டு நெகட்டிவ் என ரிசல்ட் வந்தது. இதனைத் தொடர்ந்து திட்டமிட்டபடி போட்டி நடைபெற்றது.
தற்போது இந்த சம்பவங்கள் சர்ச்சையை கிளப்பியுள்ளது. காரணம் இதே கொரோனா காரணத்தை வைத்து தான் இந்திய அணி இங்கிலாந்துடனான 5வது டெஸ் போட்டியில் பங்கேற்காமல் ரத்து செய்தது. இத்தனைக்கும் அனைத்து இந்திய வீரர்கள் கொரோனா நெகட்டிவ் என்று ரிசல்ட் வந்தது.
அப்படியிருந்தும், இந்திய அணி கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை. இதே காட்சி தான் ஐபிஎல் தொடரில் பிரதிபலித்துள்ளது. நடராஜனுக்கு மட்டும் கொரோனா தொற்று உறுதியாக, மற்றவர்களுக்கு நெகட்டிவ் என்றே முடிவு வந்துள்ளது.
ஆனால், இப்போது இங்கிலாந்தில் எடுக்கப்பட்ட முடிவு போல், போட்டி நிறுத்தப்படவில்லை. இன்று திட்டமிட்டப்படி நடக்கிறது.
இதனால் சர்வதேச போட்டியில் கொரோனா வந்தால் இரத்தம்.. ஐபிஎல்-ல் வந்தால் தக்காளி சட்னியா? என பலரும் கேள்வியெழுப்பியுள்ளனர்.