கள்ளக்குறிச்சி கலவரம்; உரிய நியாயம் கிடைக்க வேண்டும் - சசிகலா அறிக்கை..!
கள்ளக்குறிச்சி மாணவி மரணமடைந்த வழக்கில் உரிய நியாயம் கிடைக்க வேண்டும் என சசிகலா தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி கலவரம்
கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி கல்வி பயின்று வந்த பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரத்திற்கு நீதி கேட்டு நேற்று நடந்த போராடட்டம் கலவரமாக மாறியது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கற்களை வீசி தாக்கியதில் விழுப்புரம் சரக டிஐஜி பாண்டியன்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் உள்பட 58 போலீசார் காயமடைந்தனர்.
கலவரத்தின் போது பள்ளியின் உள்ளே நுழைந்த போராட்டக்காரர்கள் பள்ளியின் சொத்துக்களை அடித்து நொறுக்கினர்.

இதில் பள்ளி முழுவதும் போராட்டக்காரர்களால் சூறையாடப்பட்டது.இந்த கலவரம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்த நிலையில் மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவுகளை பதிவேற்றி வருகின்றனர்.
சசிகலா வலியுறுத்தல்
இதனிடையே மாணவியின் மரணத்தில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் தப்பித்துவிடாமல் அவர்களுக்கு உரிய தண்டனையை வழங்க வேண்டும் என்று வி.கே.சசிகலா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் மர்ம மரணத்திற்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும், வெளிப்படையான விசாரணையை நடத்த வேண்டும். மாணவியின் மரணத்தில் சம்பந்தப்பட்டவர்கள் யாரும் தப்பித்துவிடாமல் அவர்களுக்கு உரிய தண்டனையை வழங்க வேண்டும் என்று அதில் வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார்.
— V K Sasikala (@AmmavinVazhi) July 18, 2022