பஸ்ஸில் பெண்களிடம் தவறாக நடப்பவர்களை இறக்கிவிடலாம்: தமிழக அரசு அறிவிப்பு
பெண் பயணிகளிடம் தவறாக நடந்துகொள்பவர்களை ஓட்டுநர், நடத்துனரே பேருந்துகளில் இருந்து இறக்கி விடலாம் அல்லது காவல் நிலையத்தில் ஒப்படைக்கலாம் என தமிழ்நாடு அரசு கூறியுள்ளது.
பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகளில் வரைவு திருத்தங்களை உருவாக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி பேருந்துகளில் பயணிக்கும் ஆண் பயணி யாரும் ஆபாசமான செயலை செய்தாலோ, உற்றுப் பார்ப்பது, விசில் அடிப்பது, கண் சிமிட்டுவது, புண்படுத்தும் சைகைகள் அல்லது பாடல்களைப் பாடுவது, வார்த்தைகளை உச்சரிப்பது போன்றவற்றில் ஈடுபட்டாலோ குற்றமாகக் கருதப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பெண் பயணிகளிடம் தவறாக நடந்துகொள்பவர்களை எச்சரிக்கைக்குப் பிறகு ஓட்டுநர், நடத்துனரே பேருந்துகளில் இருந்து இறக்கி விடலாம் அல்லது காவல் நிலையத்தில் ஒப்படைக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. அதேபோல் பெண் பயணி அல்லது சிறுமிக்கு எரிச்சல், துன்புறுத்தலை ஏற்படுத்தும் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை காண்பித்தால் நடவடிக்கை எடுக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு பெண் பயணி அல்லது சிறுமியின் பயணத்தின் நோக்கம் குறித்து பொருத்தமற்ற கேள்விகள் எதையும் கேட்கக்கூடாது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.