‘ரொம்ப கஷ்டமா இருக்கு’ - அணியில் இடம் கிடைக்காததால் கண் கலங்கிய சிராஜ்
டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம் கிடைக்காதது வருத்தத்தை கொடுத்துள்ளதாக இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் தெரிவித்துள்ளார்.
நடப்பாண்டுக்கான டி20 உலகக்கோப்பை ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 17 ஆம் தேதி முதல் நவம்பர் 14 ஆம் தேதி வரை நடைபெற உ:ள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட் , இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ராகுல் சாஹர், ரவிச்சந்திரன் அஸ்வின், அக்ஸர் படேல், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, புவனேஸ்வர் குமார், முகமது சமி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
ஷிகர் தவான், சாஹல்,முகமது சிராஜ், ஷர்துல் தாகூர், நடராஜன், குல்தீப் யாதவ் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. இது கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், அணியில் தனக்கு இடம் கிடைக்காதது சற்று வருத்தத்தை கொடுத்ததாக முகமது சிராஜ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் விளையாட வேண்டும் என்பது எனது மிகப்பெரும் கனவு. ஆனால் அணி தேர்வு நமது கையில் இல்லை. நம்மால் முயற்சி மட்டுமே செய்ய முடியும். இது போன்று எனக்கு பல லட்சியங்கள் உள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடர்களின் மூலம் அதிகமான விஷயங்களை கற்றுள்ளேன். எதிர்வரும் தொடர்களிலும் எனது பங்களிப்பை சரியாக செய்து கொடுக்க வேண்டும் என்பதே எனது விருப்பம் என சிராஜ் கூறியுள்ளார்.