ட்ரோல்களில் சிக்கிய டாக்டர் ஷர்மிகா - இந்திய மருத்துவ இணை இயக்குநர் எச்சரிக்கை!
டாக்டர் ஷர்மிகாவிற்கு இந்திய மருத்துவ இணை இயக்குநர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
டாக்டர் ஷர்மிகா
பாஜகவின் சிறுபான்மை அணி பிரிவின் தலைவியாக இருப்பவர் டெய்சி சரண். இவரின் மகள் ஷர்மிகா. சித்த மருத்துவரான இவர் ஒரு தனியார் மருத்துவமனையில் மருத்துவராக உள்ளார். அவ்வப்போது பல ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வருவார்.
இவர் அளித்த பல நெறிமுறைகள் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், கவுந்து படுத்தா மார்பக புற்றுநோய் வரும். தினமும் 4 ஸ்பூன் நெய் சாப்பிட்டால் முகம் பொலிவாகும். ஒரு க்ளோப் ஜாமுன் சாப்பிட்டா, ஒரேநாளில் மூணு கிலோ எடை கூடிவிடும். நம்மளவிட பெரிய மிருகத்தை சாப்பிட்டா நம்மளால டைஜஸ்ட் பண்ணமுடியாது.
சர்ச்சை கருத்து
பீஃப் நம்மவிட பெரிய மிருகம்ங்குறதால அதைச் சாப்பிடக்கூடாது எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தமிழக அரசின் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவத் துறையின் இணை இயக்குநர் டாக்டர் பார்த்திபன் ஷர்மிகா மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ஷர்மிகா ஒரு தனியார் மருத்துவமனையின் மருத்துவராக, சமூக ஊடகங்களில் கருத்துகள் சொல்வதில் எந்தத் தடையும் இல்லை. ஆனால், மருத்துவ விதிகள் மற்றும் நெறிமுறைகளுக்கு எதிரான, தவறான கருத்துகளைப் பேசவும் கூடாது, பரப்பவும் கூடாது.
நடவடிக்கை?
அதுவும், சித்த மருத்துவத்தில் மாட்டுக்கறி என்றில்லை, எந்த இறைச்சியையும் சாப்பிடக்கூடாது என்று குறிப்பிடப்படவில்லை. யார் யாருக்கு என்ன சத்தான உணவு தேவைப்படுகிறதோ, அதற்கேற்றாற்போல அசைவமோ, சைவமோ சாப்பிடலாம். மாட்டுக்கறி சாப்பிடக்கூடாது என்பது தவறான கருத்து.
இவர்கள் சொல்வதற்கு மருத்துவ ரீதியாக எந்தவிதமான ஆதாரமும் கிடையாது. தன்னைப் பிரபலப்படுத்திக்கொள்வதற்கான ஒரு நிகழ்வாகத்தான் இதனைப் பார்க்கிறேன். இவர் குறித்து யாராவது ஒருவர் புகார் அளித்தாலும் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.