இரட்டை இலை சின்ன லஞ்ச வழக்கு - முக்கிய சாட்சியான வழக்கறிஞர் கோபிநாத் தற்கொலை - பரபரப்பு சம்பவம்
டிடிவி தினகரன் இரட்டை இலைச் சின்னத்தைப் பெறுவதற்குத் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றம் சாட்டி தொடரப்பட்ட வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
ஜெயலலிதா மறைவுக்கு பின் இரு அணிகளாக அதிமுக பிரிந்ததால் இரட்டை இலை சின்னம் தேர்தல் ஆணையம் முடக்கியது. அப்போது, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தேர்தலின் போது இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் கொடுக்க முயற்சி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு தொடரப்பட்ட வழக்கில், டி.டி.வி.தினகரன் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் டெல்லி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட தினகரன் திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமீனில் டி.டி.வி.தினகரன் வெளியில் வந்தார்.
டிடிவி தினகரனிடம் இடைத்தரகர் சுகேஷ் லஞ்சம் வாங்கியதை நேரில் பார்த்ததாக சாட்சியம் அளித்தவர் சென்னையை அடுத்த திருவேற்காடு, சுந்தரசோழபுரம் பகுதியை சேர்ந்தவர் 31 வயதான வழக்கறிஞர் கோபிநாத்.
இந்நிலையில், இவ்வழக்கின் முக்கிய சாட்சியான, கோபிநாத் தற்கொலை செய்து கொண்டுள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று மாலை, கோபிநாத்தை செல்போனில் தொடர்பு கொண்ட அமலாக்கத்துறையினர், விசாரணைக்கு டெல்லி வருமாறு தகவல் கூறியதாகவும், இதனால் மன வேதனையில் இருந்த கோபிநாத் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த வழக்கறிஞர் கோபிநாத்தின் சீனியர் வழக்கறிஞரான ராமாபுரத்தை சேர்ந்த மோகன்ராஜ். இவரை அமலாக்கத்துறை இவ்வழக்கில் குற்றவாளியாக சேர்த்துள்ளனர்.
வழக்கறிஞர் மோகன்ராஜின் ஜூனியர் என்பதால், கோபிநாத் வீட்டிலும், கடந்த 2017ம் ஆண்டு அமலாக்கத்துறை சோதனை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.