ஜடேஜா மாதிரி இன்னொருத்தர் : தோனியின் பதிலால் ரசிகர்கள் நெகிழ்ச்சி
ஐபிஎல் 15வது சீசன் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை - மும்பை அணிகள் மோதின. இந்த போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது.
நேற்றைய தோல்வி மூலம் நடப்பு சீசனில் ஏற்கனவே பிளே ஆப் வாய்ப்பை இழந்த மும்பை அணியுடன் சென்னை அணியும் தற்போது இணைந்துள்ளது.
இந்த சீசனில் சென்னை அணியின் கேப்டனாக தொடக்கத்தில் நியமிக்கப்பட்ட ஜடேஜா பின்னர் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். அதை தொடர்ந்து அவர் காயம் காரணமாக மீதமுள்ள போட்டிகளில் இருந்து முழுவதுமாக விலகினார்.
பின்னர் தோனி மீண்டும் கேப்டன் ஆனார். இந்த நிலையில் மும்பை அணியுடனான நேற்றைய போட்டியில் டாஸ் நிகழ்வின் போது ஜடேஜா குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு தோனி பதில் அளித்தார்.
ஜடேஜா விளையாடாதது அணிக்கு எத்தகைய இழப்பு என தோனி கூறுகையில், "அவர் அணியில் இருந்தால் எங்களால் பலவித "காம்பினேஷன்"-களையும் முயற்சி செய்து பார்க்க முடியும்.
எந்த நிலையிலும் களமிறங்கி விளையாடக்கூடியவர். சிஎஸ்கே அணியில் ஜடேஜாவின் இடத்தை நிரப்புவது மிகக் கடினம். அவரைப் போல் யாரும் பீல்டிங் செய்ய முடியாது. அந்த விதத்தில் அவருக்கு பதிலாக மாற்று வீரர் என்ற பேச்சுக்கே இடமில்லை” எனத் தோனி தெரிவித்தார்.
ஜடேஜா அணியில் இருந்து விலகியது காயம் காரணமாக அல்ல, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக என சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவி வரும் நிலையில் தற்போது ஜடேஜா குறித்து தோனி இவ்வாறு பேசியுள்ளது ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.