ஏழரை லட்சம் கோடி ஊழலுக்கு பதில் சொல்ல வக்கில்ல...உதயநிதி விளாசல்..!!
ஏழரை லட்சம் கோடி ஊழலுக்கு பதில் சொல்ல வக்கில்லாமல், ஒரே நாடு ஒரே தேர்தல் போன்ற பிரச்சனைகளை கிளப்பிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
உதயநிதி பேட்டி
ராமநாதபுர மாவட்டம் பரமக்குடியில் அமைந்துள்ள இமானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்திய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், ஒரே நாடு, ஒரே தேர்தலை கலைஞர் ஆதரித்தது குறித்த கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த உதயநிதி, "கலைஞர் எப்போது ஆதரித்தார் என வினவிய அவர், எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் இருந்த போது, அதனை எதிர்த்து விட்டு, அது குறித்து ஒரு பேட்டி கூட அளிக்கலாம் வெறும் கடிதம் மூலமாக எதிர்ப்பை தெரிவித்தார் என சுட்டிக்காட்டி விமர்சனம் செய்தார். தற்போது ஒரே நாடு ஒரே தேர்தலலை கொண்டு வந்து என்ன சாதிக்கப் போகிறார்கள் என்றும் கேள்வி எழுப்பிய உதயநிதி, சமீபத்தில் தான் கர்நாடகாவில் தேர்தல் முடிந்தது என்றும் மற்ற இதர மாநிலங்களில் ஆட்சிகள் கவிழாதா? என வினவினார்.
பதில் சொல்ல வக்கில்ல..?
ஏழரை லட்சம் கோடி ஊழலுக்கு பதில் சொல்ல வக்கில்லாமல் ஒவ்வொரு நாளைக்கு, ஒவ்வொரு பிரச்சனையை கிளப்பி விடுகிறார்கள் என கடுமையான விமர்சனத்தை முன்வைத்து, இந்தியாவை மாற்றி காட்டுகிறேன் என்ற மோடி அதே போல மாற்றிவிட்டார் அதற்கு தனது வாழ்த்துக்கள் என சாடினார். சனாதனம் சர்ச்சை குறித்த கேள்வி கேட்கப்பட்ட போது, கொள்கைக்காக உருவாக்கப்பட்டது தான் திமுக என்றும் ஆட்சியை விட முக்கியம் சமூக நீதி தான் என குறிப்பிட்டு தொடர்ந்து அது குறித்து பேசுவேன் என கூறினார்.
தற்போது சனாதன விவகாரத்தை காட்டிலும், அதைவிட முக்கியமானது 2024 தேர்தலில் பாசிச பாஜகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என குறிப்பிட்ட உதயநிதி, மணிப்பூரில் மிகப்பெரிய போராட்டம் நடந்தது. சர்ச்சுகள் இடிக்கப்பட்டுள்ளது, முதலில் அதைப் பற்றி பேசுவோம் என்றும் அதன் பிறகு சனாதனத்தை பற்றி பேசுவோம் என தெரிவித்தார்.