வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு நடத்திய போலீஸ்காரர்
மதுரையில் தன் வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு நடத்தி அசத்திய காவல்துறை அதிகாரியின் செயல் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாநகர காவல் துறையில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் சக்திவேல். இவர் மதுரை ஜெய்ஹிந்த்புரம் மதுரை மாநகர காவல்துறையில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் சக்திவேல் தனது வீட்டில் கடந்த மூன்று வருடங்களாக டாபர் மேன் வகையை சேர்ந்த சுஜி என்ற பெண் நாய் ஒன்றை வளர்த்து வருகிறார்.
செல்லமாக வளர்த்து வரும் தனது நாயான சுஜியை பாசத்தோடும்,
அன்போடும் வளர்த்து வரும் சக்திவேல், பெண்நாயை உயர்ரக டாபர்மேன் வகையை சேர்ந்த ஆண்நாய் ஒன்றுடன் இணை சேர்த்துள்ளார்.
இதனால் கர்ப்பம் தரித்த சுஜிக்கு சக்திவேலும், அவரது குடும்பமும் இணைந்து வளைகாப்பு நடத்த திட்டமிட்டு, இன்று தனது வீட்டில் பெண் நாய் சுஜிக்கு வளைகாப்பு நடத்தினார்.
தனது குடும்பத்தினரோடு, அருகில் வசிப்பவர்களையும் அழைத்து கர்ப்பமாக உள்ள சுஜிக்கு 10 ஆயிரம் ரூபாய் செலவில் தடபுடலாக 5 வகை உணவுடன் வளைகாப்பு நிகழ்ச்சியை காவல்துறையை சேர்ந்த அதிகாரி சக்திவேல் நடத்தி உள்ளார்.
பெண் நாய் சுஜிக்கு வளையல்கள் அணிவித்தும், மாலை அணிவித்தும் ஒரு பெண்ணுக்கு வளைகாப்பு நடத்துவது போல நடத்தப்பட்டது.
மேலும் ஐந்து வகை உணவுகளை தயார் செய்து அதனை சுஜிக்கு அளித்ததோடு, வளைகாப்பு நிகழ்ச்சிக்கு வந்த அனைவருக்கு விருந்து வைக்கப்பட்டது.