கொரோனா மரண கணக்குகள் குறைத்து காட்டப்படுகிறதா? வட மாநிலங்களில் கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா
கொரோனா பரவலின் இரண்டாம் அலை இந்தியாவில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. பாதிப்பு எண்ணிக்கைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிற நிலையில் மரணங்களும் தினசரி ஆயிரத்தைக் கடந்து பதிவாகி வருகின்றன. இந்த எண்ணிக்கை இனிவரும் நாட்களில் அதிகரிக்கவே செய்யும் என வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
குறிப்பாக வட இந்திய மாநிலங்கள் இரண்டாவது அலையில் அதிகமாக பாதிப்படைந்துள்ளன. ஆனால் கொரோனா இறப்பு எண்ணிக்கையை அரசுகள் மறைப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
பல்வேறு ஊர்களில் இறப்பவர்களை அடக்கம் அல்லது தகனம் செய்ய இடம் இல்லாமல் மயான நிலையங்கள் நிரம்பி வழிவதாக செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன.
சில ஊர்களில் நூற்றுக்கணக்கான உடல்கள் கொரோனா வழிமுறை பின்பற்றி தகனம் செய்யப்பட்டாலும் அரசாங்க கணக்கில் குறைவான எண்ணிக்கையிலே இறப்புகள் பதிவு செய்யப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.