மூச்சுத்திணறலால் கடும் அவதி- நடிகர் கார்த்திக்கு மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை
மூச்சுத்திணறல் காரணமாக நடிகர் கார்த்திக் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், நடிகர் கார்த்திக்கு மூச்சுத்திணறல் அதிகம் இருப்பதால் அவதிப்பட்டு வருவதாகவும், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளது.
கார்த்திக்குக்கு கடந்த 21ம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து, அவர் அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் குணமடைந்து தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்றார். அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மதுரை, ராஜபாளையம் பகுதிகளில் அவர் பிரச்சாரம் செய்தார். பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

இதையடுத்து அவர் மீண்டும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது, அவருக்கு கொரோனா இல்லை என்று தெரிய வந்தது.
கொரோனா தொற்று இல்லாதபோதிலும் கூட, மூச்சுத்திணறல் அவருக்கு இன்னமும் சரியாகாமல் அவதிப்பட்டு வருகிறார். இதனால் நடிகர் கார்த்திக்கு தொடர்ந்து மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.