ஆப்ரேஷனே பண்ண தெரியல...டாக்டர் இங்கே வந்தே ஆகணும் - கொந்தளிக்கும் மாணவியின் பயிற்சியாளர்
கால் வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், வீராங்கனை பிரியாவின் உடலை வாங்க மறுத்து நண்பர்கள், உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வீராங்கனைக்கு தசைப்பிடிப்பு
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் பிரியா இவருக்கு வயது 17. இவர் சென்னை ராணிமேரி கல்லுாரியில் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார்.
இவர் கால்பந்தாட்டத்தில் மிகவும் ஆர்வம் கொண்டவராக இருந்து வந்துள்ளார். மாணவி பிரியா தேசிய அளவிலான கால்பந்தாட்ட போட்டியில் கலந்து கொண்டு சாதனைகளை படைத்து வந்தார்.
இந்த நிலையில், அண்மையில் மாணவியின் காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவி சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பரிசோதனை செய்துள்ளார்.
அப்போது காலில் தசைப்பிடிப்பால் சவ்வு விலகி இருப்பது பரிசோதனை மூலம் தெரியவந்துள்ளது. இதை தொடர்ந்து மருத்துவர்களின் பரிந்துரைப்படி தனது வீட்டின் அருகே உள்ள கொளத்துார் அரசு புறநகர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மாணவி உயிரிழப்பு
மாணவிக்கு மருத்துவர்கள் அடங்கிய குழு செய்த பரிசோதனையில், காலில் தசைகள் அனைத்தும் அழுகக்கூடிய நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், பிரியாவின் காலை அகற்ற வேண்டும் என கூறி அவரது காலை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.
இதன் பின்னர் அவர் ராஜீவ் காந்தி அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மாணவி பிரியாவுக்கு தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்களை பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மாணவிக்கு தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.
உயிரிழந்த மாணவி பிரியாவின் உடலை அவரது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பிரியா உடலை கொண்டு செல்லும் வாகனத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் மாணவிக்கு கால்பந்து பயிற்சி கொடுக்கும் பயிற்சியாளர் ஜோயல் தெரிவிக்கையில் சர்ஜரி பண்ண தெரியாதவர்கள் எல்லாம் ஏன் டாக்டர் ஆகணும் என கேள்வி எழுப்பினார்.
இந்தியாவிற்காக விளையாட வேண்டும் என்ற கனவோடு இருந்தவர் பிரியா என கண் கலங்க தெரிவித்தாா்.