நோயாளி இருந்தால் என்ன செத்தால் நமக்கென்ன" மருத்துவ அதிகாரி பேசும் பரபரப்பு ஆடியோ!
நோயாளி உயிருடன் இருந்தால் என்ன செத்தால் நமக்கென்ன என்று சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ அதிகாரி செவிலியரிடம் பேசும் ஆடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே வடக்கு கீரனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் துரைராஜ் மகன் கார்த்திக். இவருக்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். அதன்பின் நெஞ்சுவலி ஏற்பட்டதால் செவிலியர் நோயாளி கார்த்திக்கை மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு செல்லுமாறு கூறியுள்ளார். இதையடுத்து நோயாளியின் தரப்பைச் சேர்ந்தவர்கள் இதுகுறித்து மருத்துவமனை உயர் அதிகாரி டாக்டர் மீனாவிடம் புகார் செய்தனர். அதன் பின்னர் டாக்டர் மீனா செவிலியரிடம் போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
அந்த ஆடியோவில் 'கார்த்திக்கை ஏன் தனியார் மருத்துவமனைக்கு போகுமாறு பரிந்துரை செய்தீர்கள். நாம் நோயாளிகளை அரசு மருத்துவமனைக்கு மட்டுமே மேல் சிகிச்சைக்காக பரிந்துரை செய்ய வேண்டும். நோயாளி உயிருடன் இருந்தால் என்ன செத்தால் நமக்கென்ன நோயாளியின் நல்லது கெட்டது பற்றியெல்லாம் நாம் யோசிக்கக் கூடாது' இவ்வாறு அந்த செல்போன் உரையாடல் உள்ளது. தற்போது மருத்துவ அதிகாரியின் இந்த செல்போன் உரையாடல் குறித்த ஆடியோ வெளியாகியுள்ளதால் சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.