இதை செய்யாமல் வெளிநாடுகளுக்கு வேலைக்கு போகாதீங்க - அமைச்சர் வேண்டுகோள்
வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்கள் கண்டிப்பாக அயலகத் தமிழர் நலன் துறையில் பதிவு செய்துவிட்டு வேலைக்கு செல்ல வேண்டும் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.
முத்துக்குமரன் உடல் திருச்சி வந்தது
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரை அடுத்த லட்சுமாங்குடியை சேர்ந்த முத்துக்குமரன் கடந்த மூன்றாம் தேதி குவைத்தில் வேலைக்காக சென்றுள்ளார்.
அங்கு அவருக்கு ஒட்டகம் மேய்க்கும் வேலை வழங்கப்பட்டது. பின்னர் அவரை துன்புறுத்திய அவரின் முதலாளி அவரை சுட்டுக் கொன்றுள்ளார்.
இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக லட்சுமாங்குடி கிராமத்தை சேர்ந்த மக்கள் முத்துக்குமரனின் உடலை தாயகம் கொண்டு வர வேண்டும் தவறு செய்த முதலாளி மற்றும் அவரது மகன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்து பல கட்ட போராட்டங்களை நடத்தினர்.
இதனை அடுத்து முத்துக்குமரனின் உடல் ஒரு வழியாக இன்று திருச்சி சர்வதேச விமான நிலையம் கொண்டுவரப்பட்டது.
இதில் முத்துக்குமரனின் உடலுக்கு தமிழக சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என் நேரு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன், திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து மரியாதை செய்தனர்.
அமைச்சர் வேண்டுகோள்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செஞ்சி மஸ்தான், வேலை நிமித்தமாக முத்துக்குமரன் சென்று அங்கு உயிரிழந்து இருப்பது எங்களுக்கு வேதனை அளிக்கிறது. அயலக தமிழர்களுக்கான துறை இருக்கிறது.
வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் முறைப்படி பதிவு செய்துவிட்டு செல்ல வேண்டும் அதற்காகத்தான் இந்த துறையை உருவாக்கப்பட்டு இருக்கிறது இதை பற்றி விழிப்புணர்வு வேண்டும்.
கடந்த ஆண்டில் 152 பேரும் - இந்த ஆண்டு 116 பேரும் உயிரிழந்துள்ளனர். அதே போல் வெளிநாட்டிற்கு சென்று விட்டு மீண்டும் ஊருக்கு திரும்ப வேண்டும் என்று கடந்த ஆண்டு 315 பேரும் இந்த ஆண்டு 311 பேரும் கோரிக்கை முன் வைத்திருந்தனர் அவர்களை நாங்கள் அழைத்து வந்துள்ளோம்.
இந்த துறையின் மூலமாக 181 பேரை குறுகிய கால ஒப்பந்தத்தின் அடிப்படையில் வெளிநாட்டிற்கு பணிக்காக அனுப்பி வைத்துள்ளோம். இங்கிலாந்தில் இருந்து செவிலியர் பணிக்காக 500 பேர் கேட்கப்பட்டு இருக்கிறார்கள், இதில் 481 பேர் பதிவு செய்து வேலைக்கு செல்ல தயாராக உள்ளனர்.
பல கிராமங்களில் உள்ள நிலங்கள் வஃபு வாரியத்திற்கு சொந்தம் என்கிற சர்ச்சை குறித்த கேள்விக்கு ? சர்வே எண் விடுபட்டு கிராமத்தில் பெயர் மட்டும் போடப்பட்டு இருப்பதால் பல இடங்களில் இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது. மீண்டும் மறு அளவீடு செய்வதற்கு வஃபு வாதத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் முறையாக பதிவு செய்துவிட்டு செல்வது மிக முக்கியமான ஒன்று இது குறித்த விழிப்புணர்வு நமக்கு கட்டாயம் தேவை.
உறவினர்கள் தரப்பில் முத்துக்குமரனின் உயிரிழப்புக்கு காரணமான முதலாளி மற்றும் அவரது மகன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இறந்த முத்துக்குமரனின் மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் மூன்றாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் குழந்தைகள் இருப்பதால் அவர்களின் வாழ்வாதாரத்திற்கு தமிழக அரசு உதவ வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர்.