மழைக்காலங்களில் பொது மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய சில வழிமுறைகள் இதோ

By Fathima Nov 08, 2021 12:59 PM GMT
Report

மழைக்கால நோய்கள் வராமல் தடுக்க மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து சென்னை மாநகராட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில்,

  • மழைக்காலங்களில் பரவும் வயிற்றுப்போக்கு காலரா, மஞ்சள் காமாலை டைபாய்டு போன்ற நோய்கள் வராமல் தடுக்க குடிநீரை கொதிக்க வைத்து ஆற வைத்து குடிக்கவும்.
  • உணவு உட்கொள்ளும் முன்பும், கழிவறையைப் பயன்படுத்திய பிறகும் சோப்பு உபயோகப்படுத்தி முறையாக 20 நொடிகள் கைகளை நன்கு தேய்த்து கழுவவும்.
  • வீட்டிற்கு வெளியில் செல்லும்போது காலணிகளை அனிந்து செல்லலாம். வீட்டிற்கு வெளியில் சென்று வந்த ஒவ்வொரு முறையும் கை, கால்களை சோப்பு தேய்த்து கழுவவும்.
  • சென்னை குடிநீர் வாரியத்தின் குடிநீர் வழங்கும் நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் பம்புகளில் தேங்கிய நீரை குடிநீராகப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
  • சாலையோரங்களில் விற்கப்படும் ஈ மொய்த்த மற்றும் தூசு படிந்த உணவு பண்டங்களை உண்பதை தவிர்க்கவும். சமைத்தவுடன் உணவினை சூடான நிலையிலேயே சாப்பிடவும். பழைய உணவினை சாப்பிடுவதைத் தவிர்க்கவும் .
  • திறந்த வெளியில் மலம் சிறுநீர் கழிப்பதை தவிர்த்து பொது கழிப்பிடங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
  • காய்ச்சல் வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் உடன் அருகில் உள்ள அரசு மருத்துவமனை மாநகர ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள மருத்துவரிடம் முறையான சிகிச்சை பெறவும். சுய சிகிச்சை மருத்துகளை எடுத்துக் கொள்வதைத் தவிர்க்கவும்.
  • வயிற்றுப்போக்கு மற்றும் வாந்திபேதி ஏற்பட்டால் உப்பு சர்க்கரை கரைசல் மற்றும் வீட்டிலுள்ள நீர் ஆகாரங்களை அடிக்கடி பருகவும். உடன் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறவும். 
  • தங்கள் வீட்டிலுள்ள மேல்நிலை/கீழ்நிலை தொட்டிகளை வாரம் ஒருமுறை ப்ளீச்சிங் பவுடர் கொண்டு நன்கு தேய்த்து கழுவி உலர வைத்து பயன்படுத்த வேண்டும்.
  • தேங்க வாய்ப்புள்ள அனைத்து தேவையற்ற பொருட்களையும் அகற்றி கொசு உற்பத்தி ஆகாமல் தடுக்கவும்.
  • சுகாதாரத்தை காக்க சுற்றுப்புறத்தினை தூய்மையாக பராமரிக்கவும்.